ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றதாக ராமேஸ்வரம் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவித்ததாவது:

“ராமேஸ்வரம் மற்றும் சுற்றுப்புற கடற்கரை பகுதியில் இருந்து  ஐநூறுக்கும்  மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று இரவு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது, இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினர் 10 மீனவர்களை, அவர்களது இரு படகுகளுடன் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.

கடத்தப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்” என்று ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையில் இலங்கை கடற்படை தரப்பில், தங்கள் நாட்டுப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததால் பத்து மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தர்போது அவர்கள் இலங்கையின் தலைமன்னார் பகுதியில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்கள். அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், “தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கடத்திச் செல்வது தொடர்கதையாக இருக்கிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்று ராமேஸ்வரம் மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.