சென்னை: வன்னியர்களுக்கான 10.5 % உள் ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம், இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது..

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டால் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கும் மற்ற பிரிவுகளை சேர்ந்தவர்களின் உரிமைகள் பாதிக்கப்படுகிறது. இதனால் 10.5% இடஒதுக்கட்டை ரத்து செய்ய வேண்டும் எனவும்  மற்ற சமூகத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இடஒதுக்கீடு அடிப்படையிலான பணி நியமனம், மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. வழக்கின்  விசாரணை முடிவடைந்த நிலையில்,  வன்னியருக்கான 10.5 % உள் இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை, பணி நியமனம் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் இடஒதுக்கீடு அடிப்படையிலான பணி நியமனம், மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும், வழக்கின் இறுதி விசாரணைக்கு தயாராக இருப்பதால், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 10.5 % உள் இடஒதுக்கீட்டின் கீழ் நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்க மறுத்ததுடன், வழக்கை செப்டம்பர் 14ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.