சென்னை:  அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவுச் சங்கத் தேர்தல் விவகாரம் தொடர்பாக  சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ. பெரியசாமியுடன், அதிமுகவைச் சேர்ந்த  ஓபிஎஸ், செல்லூர் ராஜூ விவாதம் நடத்தினர்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று  சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.

கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு துறையின் அமைச்சர் பதிலளித்ததோடு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி துறை தொடர்பான பேசினார்.

அதிமுக ஆட்சியில் கூட்டுறவுச் சங்கங்களில் முறையாகத் தேர்தல் நடைபெறவில்லை என குற்றஞ்சாட்டினார்.

அதையடுத்து  குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ், அமைச்சரின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்ததுடன், கூட்டுறவுச் சங்கங்களில் 22 ஆண்டுகள் புதிய உறுப்பினர்கள் பதியாமல் இருந்து வந்தது. இதற்காக  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தி புதிய உறுப்பினர்கள் கிராமசபை கூட்டம் மூலமாகச் சேர்க்கப்பட்டார்கள் என்று கூறினார்.

இதையடுத்து பேசிய  கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, அதிமுக ஆட்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்கள் முறையாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும், அவர்கள்  பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார்கள் என்பதுதான் உண்மை என்று கூறியதுடன்,  1200 சங்கங்களில் முறையாகத் தேர்தல் நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டியதுடன்,  400 சங்கங்களில்  தேர்தல் நடக்கவில்லை, அதற்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்திருந்தது என்று கூறினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ,  திமுக ஆட்சிக் காலத்தில் கூட்டுறவுத் துறை சிறப்பாகச் செயல்பட்டமைக்கு இரண்டு விருதுகள்தாம் வாங்கியுள்ளது. ஆனால்  கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 28 விருதுகளை வாங்கியுள்ளோம் என்று பெருமையுடன் தெரிவித்தவர், கடந்த காலத்தில் நடைபெற்ற எந்தவொரு கூட்டுறவுசங்கத் தேர்தலையும் நீதிமன்றம்  ரத்துசெய்யவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மேலும், அதிமுக ஆட்சிக் காலத்தில் சுமார் 2800-க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் பெரியசாமி 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில்,  சுமார் 3000 நியாயவிலைக் கடைகளைத்தான் திறந்துவைத்துள்ளது. ஆனால் திமுக ஆட்சிக் காலமான 5 ஆண்டுகளில் சுமார் 3500-க்கும் மேற்பட்ட பகுதி, முழு நேர நியாயவிலைக் கடைகளைத் திறந்துவைத்துள்ளோம் என்றார்.

இவ்வாறு காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றன.