சென்னை

ன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

வரும் ஜூன் மாதம் 16 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் முடிவடைவதால் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. எனவே தேசிய, மாநில கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தற்போதே தொடங்கி உள்ளன

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் இறுதி வாரம் அல்லது ஏப்ரல் முதல் வாரம் வெளியாகும் எனத் தெரிகிறது. கடந்த 1.1.2024  தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு நாடு முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். இரட்டை பதிவு, இறப்பு போன்ற காரணங்களினால் தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 94 ஆயிரத்து 985 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

டிசம்பர் 9-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, ஆதார் எண்ணை இணைக்க விண்ணப்பம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பல்வேறு தேதிகளில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது

மேலும் 17 வயது நிறைவடைந்து ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்களும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம் என்றும், எந்த தேதியில் அவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடைகிறதோ அப்போது அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஏராளமானோர் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க விண்ணப்பம் அளித்தனர். முகவரி மாற்றம், திருத்தம் போன்ற பணிகளுக்காகவும் பலர் விண்ணப்பம் கொடுத்தனர். மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 35 பேர் விண்ணப்பம் அளித்ததாகத் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டுப் பெயர் சேர்த்தல், திருத்தம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வாக்குச்சாவடி அலுவலர்கள், இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி வாக்காளர் பட்டியலில் ஒரே நபரின் பெயர் 2 இடங்களில் இருக்கும்பட்சத்தில், அதனைக் கண்டறிய நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அத்தகைய வாக்காளர்களுக்கு, வாக்குச்சாவடி அலுவலர் மூலம் கடிதம் அனுப்பப்பட்டு எந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற வேண்டும் என அவரது விருப்பத்தைக் கேட்டு அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டது.

பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரானது. இன்று பகல் 11 மணிக்கு இந்த இறுதி வாக்காளர் பட்டியலைச் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிடுகிறார். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.