சென்னை:

ரு கைகளை இழந்தும் நம்பிக்கையை இழக்காத தான்சென் என்ற வாலிபர், தன் விடாமுயற்சியால், தமிழகத்தின் முதல் நபராக கார் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றுள்ளார்.

சென்னையில் வியாசர்பாடி பெரியார் நகரைச் சேர்ந்தவர் தான்சென் என்னூம் 31 வயது இளைஞர் 10 வயதை நெருங்கிய போது, மின்சார விபத்தில் சிக்கி, மூட்டுக்கு கீழ் தன் இரண்டு கைகளையும் இழந்தார்.  ஆயினும் தொடர் முயற்சியால், இன்ஜினியரிங் முடித்து தொடர்ந்து பி.எல்., முடித்து எம்.எல்., படித்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி ஒன்றரை வயதில் மகள் உள்ளார்.

இவர் பிறரை சார்ந்து வாழ விரும்பாமல், ஸ்ரீவாரி சங்கர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் உதவியுடன், கார் ஓட்ட பழகி உள்ளார். இவர் அதே தன்னம்பிக்கையுடன் ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பித்தார். ஆனால் உரிமம் பெற வட்டார போக்குவரத்து அலுவலர்களின் சோதனையின் போது, இவர் சில நடைமுறை சிக்கல்களை சந்திப்பதை உணர்ந்து, சென்னை கே.கே., நகரில் உள்ள புனர்வாழ்வு மருத்துவமனையின் உதவியை நாடும்படி பரிந்துரைத்தனர்.

எனவே இவருக்கு ஏற்ற மாதிர் காரின் வடிவமைப்பை மாற்றவும், தானியங்கி, ‘கியர்’ முறையை கையாளும்படியும் அறிவுறுத்தப்பட்டது.  அந்த மருத்துவமனையின் உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வியல் துறை இயக்குனர் திருநாவுக்கரசு, டாக்டர்கள் வளவன், அப்துல் உள்ளிட்டோரும் வழிகாட்டினர்.

பிறகு அவர் ரெட்டேரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெற்று, தமிழகத்திலேயே முதல்முறையாகவும், நாட்டிலேயே மூன்றாவது நபராகவும் கைகள் இல்லாத கார் ஓட்டுனர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வியல் துறை இயக்குனர் பி.திருநாவுக்கரசு இது குறித்து,

”தானாக காரின் கதவை திறப்பது, ‘சீட் பெல்ட்’ அணிவது, அவசர நேரத்தில் ‘பிரேக்’ பிடிப்பது, ‘ஹாரன்’ அடிப்பது போன்றவற்றை மூன்று மாதங்களாக கண்காணித்து, சில பயிற்சிகளையும் வழங்கினோம்.   மேலும் அவரது காரின் வடிவமைப்பிலும் சில மாற்றங்களுக்கு பரிந்துரைத்தோம். அவர் அதில் தேர்ச்சி பெற்று, எவ்வித இடர்ப்பாடும் இல்லாமல், சுயமாக கார் ஓட்டினார்.

ஆகவே  அவருக்கு ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான பரிந்துரை அளித்தோம். அவர் தற்போது, ஓட்டுனர் உரிமம் பெற்று மற்றவர்களை போல இயல்பாகவே, அனைத்து வகையிலும் கார் ஓட்டுகிறார்.”

என்று தெரிவித்துள்ளார்.