தேனி

தேனியில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அத்துமிறி நுழைந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்

கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல். வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளிட்டவை பாதுகாப்பாக எடுத்து வரப்பட்டு, தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் ஆயுதப்படிஅ காவலர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  வாக்கு எண்ணும் மையம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு இந்த கட்டுப்பாட்டு அறையை வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்களும் பார்வையிட்டு வருகின்றனர்.

நேற்று வாக்கு எண்ணும் மையத்துக்குள் ஒரு வாலிபர் தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை காவல்துறையினர் நிறுத்த முயற்சித்த போது தடையை மீறி உள்ளே நுழைந்தார். அவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரித்தபோத் அவர் சின்னமனூர் அருகே சீப்பாலக்கோட்டை ராஜா தெருவை சேர்ந்த செல்வம் மகன் ராஜேஷ் கண்ணன் (வயது 27) என்பது தெரியவந்தது.

அவர் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அத்துமீறி நுழைந்தது குறித்து போலீசார் விசாரித்தபோது, ‘இது எங்க ஏரியா. அப்படித் தான் வருவேன்’ என்று கெத்தாக பேசியதோடு, அங்கிருந்த காவலர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அவர் அதே கல்லூரியில் ஊழியராக வேலை பார்ப்பதாக கூறினார். ஆனால் கல்லூரி நிர்வாகத்திடம் போலீசார் விசாரித்த போது, அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ஊழியராக பணியாற்றியதாகவும், தற்போது அங்கு அவர் பணியாற்றவில்லை என்றும் கூறியுள்ளனர்.

ராஜேஷ் கண்ணனை பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் மதுக்கண்ணன் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துஅதன்பேரில், இந்திய தண்டனை சட்டம் 448 (அத்துமீறி நுழைதல்), 294 (பி) (ஆபாசமாக பேசுதல்), 506(2) (கொலை மிரட்டல் விடுத்தல்), 353 (அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) ஆகிய 4 பிரிவுகளில் ராஜேஷ் கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

காவல்த்றையினர் அவர் அத்துமீறி நுழைந்ததற்கு அரசியல் காரணங்கள் எதுவும் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தியதில், அப்படி எந்த காரணமும் இல்லை என்று தெரியவந்தது. ஆயினும் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி அவரை இன்று தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நீடிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.