சென்னை

சென்னை மெட்ரோ ரயிலில் பயண செய்யாமல் வாகனத்தை நிறுத்துவோருக்கு வாகன நிறுத்தக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ”வகையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களின் பயன்பாட்டின் அடிப்படையில் பின்வரும் மாற்றங்களை செய்துள்ளது.

கடந்த 30 நாட்களில் குறைந்தது 15 பயணங்கள் செய்த மெட்ரோ பயணிகளுக்கு மாதாந்திர பாஸ் வசதி விம்கோ நகர் பணிமனை, ஸ்ரீ தியாகராய கல்லூரி, நேரு பூங்கா, கோயம்பேடு, அசோக் நகர் மற்றும் ஆலந்தூர் மெட்ரோ ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய வண்ணாரப்பேட்டை, நந்தனம், எழும்பூர் மற்றும் செனாய் நகர் மெட்ரோ ஆகிய 4 மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் இட வசதி இல்லாத காரணத்தினால் மாதாந்திர பாஸ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்களில் பயணிக்காமல் வாகன நிறுத்தும் வசதியை மட்டும் பயன்படுத்துபவர்களின் தேவை அதிகரித்துள்ளதால், திருவொற்றியூர், திருவொற்றியூர் தேரடி, காலடிப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர்நீதிமன்றம், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி, நந்தனம், கிண்டி, ஆலந்தூர், நங்கநல்லூர் சாலை, மீனம்பாக்கம், விமான நிலையம், அசோக் நகர், திருமங்கலம் மற்றும் எழும்பூர் மெட்ரோ என 18 மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ பயணிகள் அல்லாதவர்களின் வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 30 நாட்களில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாதவர்கள் அல்லது 15-க்கும் குறைவான பயணம் செய்தவர்களுக்கு அரும்பாக்கம் மெட்ரோ மற்றும் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையங்களில் மாதாந்திர வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மீதமுள்ள மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் கட்டணத்தில் எவ்வித மாற்றம் இல்லை. மேலும் விவரங்களுக்கு மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் https://Chennaimetrorail.org/parking-tariff/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்” 

என்று கூறப்பட்டுள்ளது.