சென்னை அமைந்தகரையில் காதல் தோல்வி காரணமாக வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அமைந்தகரை எம்.எம்.காலனி, ஏ பிளாக்கை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் ஏழுமலை. மெக்கானிக்கான இவர், அசோக் நகரில் உள்ள இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் ஷோரூமில் வேலை செய்துவந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ஏழுமலை, தனது அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர், கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு தங்கள் மகன் ஏழுமலை, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மகனின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த அமைந்தகரை போலீசார், தூக்கில் தொங்கிய ஏழுமலை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், ஏழுமலை ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தனது காதலை ஏழுமலை தெரிவித்தபோது அந்த பெண் அதை ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. தனது காதல் தோல்வி அடைந்ததால் மனம் உடைந்த ஏழுமலை, தான் சாவப்போவதாக தனது நண்பர்களுக்கு ‘வாட்ஸ்அப்’ மூலம் தகவல் அனுப்பி விட்டு, தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.