ராயப்பேட்டை அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ. 23 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டை கவுடியாமடம் சாலையில் நேற்று இரவு சந்தேகத்துக் கிடமாக 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அந்த வழியாக ரோந்து சென்ற ராயப்பேட்டை போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் ரூ.23 லட்சம் பணம் இருந்தது. அதுபற்றி போலீசார் கணக்கு கேட்டனர். ஆனால் இருவரும் சரியாக பதில் அளிக்கவில்லை. ரூ.23 லட்சம் பணத்துக்கு உரிய ஆவணங்களும் இல்லை. இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த பணத்தை மண்ணடியை சேர்ந்த அபுபக்கர், ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது கனி ஆகிய இருவரே பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக 2 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த பணம் எங்கிருந்து எடுத்து வரப்பட்டது? பணத்தை எடுத்துச் சென்ற 2 பேரின் பின்னணி என்ன? யாரிடம் கொடுப்பதற்காக இவர்கள் பணத்தை எடுத்துச் சென்றனர்? என்பது போன்ற கேள்விகளுக்கு ராயப்பேட்டை போலீசார் பதில் அளிக்க மறுத்து விட்டனர். அபுபக்கர், முகமது கனி இருவரும் ராயப்பேட்டை கவுடியாமடம் சாலையில் இந்தியன் வங்கி ஏ.டி.எம். அருகிலேயே பிடிபட்டுள்ளனர். இதனால் இந்த பணத்தை ஏ.டி.எம். எந்திரம் வழியாக வங்கி கணக்கில் செலுத்துவதற்காக எடுத்து வந்தார்களா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.