சென்னை

டந்த 2015 ஆம் வருடம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் நேற்று கடும் விவாதம் நடந்துள்ளது.

நேற்று தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து விவாதம் நடந்தது.து. திமுக உறுப்பினர் நந்தகுமார், கடந்த ஆட்சியில் கால்வாய்கள் முறையாகத் தூர்வாரப்படாததே சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்குக் காரணம் எனத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியதால்தான் வெள்ளம் ஏற்பட்டதாகக் கூறினார்.  அதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர் நந்தகுமார், உரிய நேரத்தில் திறந்து விடப்படாததால், செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து நீர் வெளியேறியதாகத் தெரிவித்தார்.

ஆனால் செம்பரம்பாக்கம் ஏரி உடையவில்லை எனவும், அணை நிரம்பியதால் உபரிநீர் மட்டுமே வெளியேற்றப்பட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

இடையில் குறுக்கிட்ட காங்கிரஸ் உறுப்பினர் செல்வ பெருந்தகை, செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்க முதலமைச்சர் உத்தரவுக்காக 4 நாட்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் காத்திருந்தனர் எனவும், ஏரியிலிருந்து ஒரே நாளில் அதிகளவு நீர் வெளியேற்றப்பட்டதாகவும் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி, மழைக்காலங்களில் அணைகள் மற்றும் ஆறுகள் நிரம்புவது வழக்கம்தான் என தெரிவித்து, பாசனத்திற்காக அணைகளிலிருந்து நீர் திறக்கும் போது மட்டும்தான் முதலமைச்சரின் அனுமதி தேவை எனவும் மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் அணை நிரம்பும் போது தண்ணீரைத் திறப்பது குறித்து அதிகாரிகளே முடிவு எடுக்கலாம் எனவும் கூறினார்.