மதுரை: தவறான அறுவை சிகிச்சைக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதுகுறித்து விசாரித்து வரும் நுகர்வோர் நீதிமன்றம், வழக்கில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலை சேர்த்த நிலையில், அதற்கு  உயர் நீதிமன்றம் தடை விதிதித்துள்ளது.

தென்காசி அருகே உள்ள ‘சங்கரன்கோவில் இலந்தைகுளத்தைச் சேர்ந்த முருகன் என்ற முகமது அப்துல்லா வயிற்று வலிக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட நிலையில், அவருக்கு குடல்வால் பிரச்சினைஎன கூறி ஆபரேசன் செய்யப்பட்டது. ஆனால், அவரது வயிற்று வலி தீராத நிலையில், நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்ந்தார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு நடைபெற்ற ஆபரேசன் தவறுதலாக நடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, அவரது மனைவி, தனியார் மருத்துவமனை மீது, ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி, நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தை நாடவும், தவறு செய்த மருத்துவர்கள் மீது மருத்துவ கவுன்சில்  நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் ஒரு ஆண்டு மருத்துவ தொழில் செய்ய தடை விதித்து மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது. இந்நிலையில் நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு சகிலால்பானு வழக்கு தொடர்ந்து, அதில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலையும் சேர்த்துள்ளார்.

இதை எதிர்த்து முகமதுஅப்துல்லா மனைவி உயர்நீதிமன்றம் மதுரையில் மீண்டும் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில், தவறான மருத்துவ சிகிச்சைக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நிலையில், நுகர்வோர் நீதிமன்றம் மருத்துவ கவுன்சிலை சேர்த்தது சட்டவிரோதம். எனவே, நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இழப்பீட்டு வழக்கில் மருத்துவ கவுன்சிலை விசாரிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை  நீதிபதி எஸ்.ஆனந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் வழக்கறிஞர் என்.சதீஷ்பாபு வாதிடுகை யில், ”தவறு செய்யும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவே மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் உண்டு. அதன்படி புகார் வந்ததும் முறையாக விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்குவதற்கும் மருத்துவ கவுன்சிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.

இதையடுத்து, நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீட்டு வழக்கில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தொடர்பாக விசாரிக்க இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.