சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நடிகை ஜெயலட்சுமி, தன்னை மிரட்டுவதாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை ஜெயலலிதா பாஜக உறுப்பினராக உள்ளதால், அதன்மூலம்  மிரட்டுகிறார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக தொடரில் நடித்து வருபவர் நடிகை ஜெயலட்சுமி. இவர் பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவர்மீது,   சென்னையைச் சேர்ந்த கீதா என்பவர், புகார் அளித்திருக்கிறார். புகார் மனுவில் கீதா கூறியிருப்பதாவது,

தனது கணவர் உயிரிழந்த பின்னர், தான் வசிக்கும் பகுதியில் உள்ள சில பெண்களை  இணைத்து மகளிர் குழு நடத்தி வந்ததாகவும், நடிகை ஜெயலட்சுமி எங்களிடம் வந்து பேசி, வங்கியில் 10 பைசா வட்டிக்கு லோன் வாங்கி வருவதாக கூறி, 9 பெண்களுக்கு வங்கி மூலம் லோன் பெற்றுத் தந்திருக்கிறார். இதற்காக ஒவ்வொருவரிடம் இருந்தும் அவர் வங்கிக் காசோலைகளை ஜாமீனாக பெற்றிருக்கிறார். வங்கியிலிருந்து கடன் பெற்றவர்கள் மாதம் மாதம் பணம் செலுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் செலுத்தி பணத்தில், 10 பைசா வட்டியை எடுத்துக்கொண்டுதான் மீதியை வங்கியில் செலுத்தியிருக்கிறார்கள். இது எங்களுக்கு தற்போதுதான் தெரிய வந்துள்ளது. எங்களது லோன் குறித்த கேட்டபோது, நீங்கள்  இதுவரைக்கும் கொடுத்த தொகையை வெறும் வட்டி என்று கூறி இன்னும் அசல் தொகை அப்படியே இருக்கிறது அதை இன்னும் கொடுக்கவில்லை என்று கூறி ஜெயலட்சுமி மிரட்டுகிறார்.

ஆனால், நாங்கள் தான் அசலும் வட்டியும் சேர்த்து செலுத்திவிட்டோம் என்று கூறினோம். அதற்கு, நடிகை  ஜெயலட்சுமி, அனகா என்பவர் மற்றும்  வழக்கறிஞர் சார்லஸ் ஆகியோர் எனது (கீதா) வீட்டிற்குச் வந்து மிரட்டினார்கள்.  எங்களை எதிர்த்து எதுவும் செய்தால் கூண்டோடு அழித்து விடுவோம், நாங்கள் பாஜகவை சேர்ந்தவர்கள்  என்றும் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள். அதனால்  எனது புகார்  தொடர்பாக விசாரித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை கமிஷனரிடம் அளித்த அந்த புகாரில் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்த புகார்மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சன்டிவி புகழ், பாஜக உறுப்பினர் நடிகை ஜெயலட்சுமி மீதான புகார்  பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.