சென்னை: கீழடி அகழாய்வு பணிகள் உலகம் அறிய முக்கிய காரணமாக இருந்த தமிழ்நாட்டைச் சார்ந்த தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா  கோவாவிலிருந்து சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாட்டின் பல இடங்களில் மாநில தொல்லியல் துறை ஆய்வுகளை செய்துவருகிறது. சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில் ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.  நீண்ட வாள், வெள்ளிக்காசு, முதுமக்கள் தாழி என புதைந்துகிடந்த வரலாற்றின் எச்சங்கள் மாநிலத்தின் பல இடங்களிலிருந்தும் மேலெழ ஆரம்பித்துள்ளன. 3200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டு வருகின்றன.

2015ஆம் ஆண்டில் மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் நடந்த அகழாய்வில் பெரும் கட்டடத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாட்டின் தொல்லியல் வரலாறு மற்றும் அகழாய்வுப் பணிகள் மீதான ஆர்வம் வெகுவாக அதிகரித்தது. ஆனால், கீழடி அகழாய்வை நடத்திவந்த இந்தியத் தொல்லியல் துறை, மூன்றாம் கட்ட அகழாய்வுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் வேறு அகழாய்வுகளை நடத்தவில்லை. நடத்தப்பட்ட அகழாய்வின் முடிவுகளையும் வெளியிடவில்லை. பின்னர்,  நான்காம், ஐந்தாம், ஆறாம் கட்ட அகழாய்வுகளை மாநிலத் தொல்லியல் துறையே நடத்தி முடித்தது. இதற்குப் பின் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வை நடத்த முடிவுசெய்தபோது, கீழடி மட்டுமல்லாமல் ஆதிச்சநல்லூர், சிவகளை உள்ளிட்ட தமிழ்நாட்டின் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த வேறு பல இடங்களிலும் அகழாய்வுகளை நடத்த மாநில தொல்லியல் துறை முடிவெடுத்தது.

அதன்படி கீழடி, அகரம், கொந்தகை, மணலூர்), ஆதிச்சநல்லூர், கொற்கை, கங்கை கொண்ட சோழபுரம், கொடுமணல், மயிலாடும்பாறை ஆகிய ஏழு இடங்களில் அகழாய்வுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மார்ச் மாதத்தில் துவங்கிய அகழாய்வு கொரோனா ஊரடங்கு காரணமாக மே 10ஆம் தேதி நிறுத்தப்பட்டது. பின்னர்  ஜூன் மாத இறுதியில் இருந்து மீண்டும் அகழாய்வுப் பணிகள் நடந்துவருகின்றன. மழைக் காலம் துவங்குவதற்கு முன்பாக அகழாய்வுப் பணிகள் நிறைவடைய வேண்டும் என்பதால் தற்போது பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கீழடியைப் பொறுத்தவரை தொடர்ந்து தொல்லியல் பொருட்கள் கிடைத்துவரும் பகுதியாக இருந்து வருகிறது. 2019 -20ல் நடந்த அகழாய்வில் 25க்கும் மேற்பட்ட தாழிகள் உட்பட பல தொல்லியல் பொருட்களும் கலைப் பொருட்களும் கிடைத்தன. இந்த முறை நடந்த அகழாய்வில் பல மணிகள், பானை ஓடுகள், கூரை ஓடுகள் போன்றவை கிடைத்திருக்கின்றன. இங்குள்ள தரைகள் செங்கல் கற்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன. இரு கற்களை இணைக்க களிமண்ணும் சுண்ணாம்பும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அகரம் தளத்தில் நடந்த அகழாய்வில் சில நாட்களுக்கு முன்பாக சுடுமண்ணால் ஆன அடையாளம் தெரியாத ஒரு விலங்கின் உடல் பாகத்தின் உருவ பொம்மை கிடைத்தது. பத்து சென்டிமீட்டர் அலகமும் நான்கு சென்டிமீட்டர் உயரமும் கொண்ட அந்த பொம்மை எந்த விலங்கைக் குறிக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை. மேலும் இதே அகரம் பகுதியில் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரராயன் காசுகளும் கிடைத்தன.

இந்த ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் மட்டும் விலங்கு உருவ பொம்மை, சுடுமண்ணால் ஆன பெண் முகம், செம்பு நாணயங்கள், புகைப்போக்கி குழாய் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. கண்ணாடி, யானை தந்தம், சங்கு ஆகியவற்றால் ஆண அணிகலன்களும் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.

கீழடிக்கு அருகில் உள்ள அகரத்தில்  தங்கக் கம்பி ஒன்று கிடைத்தது. மேலும், ஆதிச்சநல்லூரில் வாள், வேறு சில இரும்புப் பொருட்கள் கிடைத்தாலும் அலெக்ஸாண்டர் ரீயின் ஆய்வில் கிடைத்த அளவுக்கு பொருட்கள் கிடைக்கவில்லை.

ஆதிச்சநல்லூருக்கு அருகில் உள்ள சிவகளையும் ஈமத் தாழிகள் புதைக்கப்பட்ட இடம்தான். இதுவும் ஆதிச்சநல்லூரும் தொடக்க இரும்பு காலத்தை அதாவது கி.மு. 8 முதல் கி.மு. 9 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை. ஆதிச்சநல்லூரையும் சிவகளையையும் ஒரே நிலப்பகுதியாகவும் கருத முடியும். இந்த சிவகளை புதைமேடு கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கருக்குப் பரந்து கிடக்கிறது. இந்த அளவுக்கு மிகப் பெரிய புதைமேடு இருக்கிறதென்றால், அதற்கு அருகில் உள்ள பராக்கிரமபாண்டிய புரம், மூலக்கரை போன்ற பகுதிகளில் மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

சிவகளையில் சிவகளைப் பரம்பு, பேட்மாநகரம், ஸ்ரீ மூலக்கரை ஆகிய இடங்களில் 15க்கும் மேற்பட்ட ஆய்வுக் குழிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் 5 தாழிகள் மூடியுடன் கண்டெடுக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக இதுவரை சுமார் 40க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவை தவிர, நூல் நூற்க உதவும் தக்கிளி, புகைப்பான், கருப்பு – சிவப்பு மண்பாண்டங்கள், பழங்கால மற்றும் இடைக்கால கருவிகள், எலும்புகள், நடுகற்கள் உள்ளிட்டவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூரைப் போலவே இங்கும் மூன்று பண்பாட்டு அடுக்குகள் காணப்படுகிறன. இங்கு கிடைத்த ஈமத் தாழிகளில் கிடைத்த பொருட்களை ஓஎஸ்எல், டிஎல் டேட்டிங் செய்து பார்க்கும்போது ஒவ்வொரு பண்பாட்டு அடுக்கின் காலமும் தெளிவாகத் தெரியவருமெனத் தொல்லியல் துறை நம்புகிறது.

பாண்டிய நாட்டின் துறைமுக நகரமாக இருந்ததாகக் கருதப்படும் கொற்கையில் 1968ல் முதல்முதலாக ஆய்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை 1961ல் உருவாக்கப்பட்ட நிலையில் அந்தத் துறையின் சார்பில் முதல்முதலில் நடந்த அகழாய்வே இங்குதான் நடத்தப்பட்டது. இங்கு கிடைத்த பொருட்களை வைத்து, இந்த இடத்தின் காலம் என்பது கி.மு. 785 என கணிக்கப்பட்டிருக்கிறது. இடைச் சங்ககால பாண்டியர்களின் துறைமுக நகரமாக கொற்கை இருந்ததாகக் கருதப்படுகிறது.

இங்கு இப்போது நடத்தப்பட்டுவரும் அகழாய்வில், பல பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன. மேலும் கடந்த வாரம் துளையிடப்பட்ட குழாய்கள் ஒன்பது அடுக்குகளாகக் கிடைத்திருக்கின்றன. இதற்குள் உள்ள பொருட்களை ஆய்வுசெய்த பிறகு, இவை எதற்காகப் பயன்படுத்தப்பட்டன என்பது தெரியவரக்கூடும்.

கங்கை கண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திரச் சோழனின் அரண்மனை அமைந்திருந்ததாகக் கருதப்படும் மாளிகை மேடு பகுதியில் தற்போது அகழாய்வு நடத்தப்பட்டுவருகிறது. இங்கு ஏற்கனவே நடந்த அகழாய்வில் சோழர் காலத்து அரண்மனையின் அடிப்பகுதியின் ஒரு பகுதி வெளிப்பட்டது. தற்போது, அரண்மனையின் அமைப்பைப் புரிந்துகொள்ளும் வகையில் ஏதாவது ஒரு பகுதியின் முழுமையையும் வெளிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இங்கு ஆங்கில எழுத்தான ‘T’ வடிவில் ஒரு பெரிய சுவர் கிடைத்துள்ளது.

மிகப் பெரிய ஆணிகளும் கிடைத்துள்ளன. “இந்த அளவுக்கு ஆணி பெரிதாக இருக்கிறதென்றால், அங்கு இருந்திருக்கக்கூடிய கதவு போன்ற மரப் பொருட்களின் உயரத்தையும் அகலத்தையும் புரிந்துகொள்ளலாம்” என்கிறார் மாநிலத் தொல்லியல் துறையின் துணை இயக்குனரான ஆர். சிவானந்தம். இங்குள்ள அரண்மனை இரட்டைச் சுவர்களால் கட்டப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்த மாளிகை சுமார் ஒன்றரைக் கி.மீ. பரப்பளவுக்கு இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இந்த மாளிகையின் மதில் சுவர் காணப்படுகிறது. ஏற்கனவே 2008ல் இங்கு நடந்த அகழாய்வில் இந்த மதில் சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. இவை தவிர, கொக்கிகள், சீன நாட்டுப் பானை ஓடுகள் போன்றவையும் கிடைத்திருக்கின்றன. டெரகோட்டா உருவங்களும் கிடைத்திருக்கின்றன.

கொடுமணல் அகழாய்வைப் பொறுத்தவரை, இங்கு பல முறை தஞ்சாவூர் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், இந்தியத் தொல்லியல் துறை, மாநிலத் தொல்லியல் துறை போன்றவை அகழாய்வுகளைச் செய்திருக்கின்றன. சுமார் 12 முறை இங்கு அகழாய்வு செய்யப்பட்டிருக்கிறது. இங்கு இதுவரை கிடைத்துள்ள பொருட்கள் எல்லாமே ஒரே காலகட்டத்தைச் சுட்டிக்காட்டுபவையாகவே இருக்கின்றன. இவைகள்  கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டுவரை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வைகை நாகரீகத்தை உயர்ந்ததாக உலகுக்குக் கூறும் கீழடியில் பலவகை மணிக்கற்கள், எழுத்தாணிகள், அம்புகள், இரும்பு, செம்பு ஆயுதங்கள், அரிய வகை அணிகலன்கள், 18 தமிழ் பிராமி எழுத்துகளுடைய மண்பாண்ட ஓடுகள் உட்பட ஆயிரக்கணக்கான தொல்லியல் பொருள்கள் கிடைத்துள்ளன. சங்க காலத்திலேயே தொழிற்கூடங்கள் இருந்துள்ளது அறியப்பட்டுள்ளது. நூல்நூற்கும் தக்ளி மக்கள் நூல் நூற்று ஆடைகள் அணிந்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. பொதுவாக அகழாய்வில் கட்டடங்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைப்பது அரிது. ஆனால், சங்க காலத்திலேயே செங்கல் கட்டடங்கள் இருந்துள்ளன என்பதை கீழடி ஆய்வு எடுத்துரைத்துள்ளது.

இதுபோன்ற அகழ்வாய்வுகள் மற்றும் அதில் கண்டெடுக்கப்படும் பொருட்கள் சுமார் 3200 ஆண்டுகளுக்கு முந்தையது என கூறப்படுகிறது. அந்தகாலத்திலேயே தமிழர்கள், பல்வேறு சிறப்புகளுடன் வாழ்ந்து வந்ததற்கான அடையாளமாக கருதப்படுகிறது. பானைகளின் மேல் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகள் பெருமளவில் மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதை விளக்குகின்றன. தங்க ஊசி போன்ற பலவகையான பொருள்கள் இந்த ஆய்வில் கிடைத்துள்ளன. இந்தப் பொருள்கள் தொழில் வளம் மற்றும் வர்த்தக தொடர்பைக் காட்டும் வண்ணம் உள்ளன. விளையாட்டுப் பகடைகள் (Dice) தங்கத்தில் கிடைத்துள்ளன. கீழடியில் தற்போது கிடைத்துள்ள பொருள்கள் அனைத்தும் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆய்வக முடிவுகள் மூலம் இன்னும் தெளிவான விளக்கத்தைப் பெற முடியும் என்று ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்த கீழடி அகழ்வாய்வுகளை உலக நாடுகளிடையே எடுத்துச்சென்றதில்,  தமிழ்நாட்டைச் சார்ந்த தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு முக்கிய பங்கு உண்டு. இவரை மத்தியஅரசு  கோவாவில் பணியமர்த்தி இருந்தது. அவரை தமிழ்நாட்டுக்கு மாற்ற அரசு சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்,  அமர்நாத் ராமகிருஷ்ணா சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.