சென்னை: இந்த ஆண்டு தமிழ் நாட்டில் நீட் தேர்வு நடைபெறுமா ? தமிழக மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வில் பங்கேற்பதா? வேண்டாமா?  என்பது குறித்து தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என  அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“நடந்து முடிந்த சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில், திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து இடங்களிலும் பேசும்போது, தாங்கள் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தமிழக மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தது.

தமிழகத்தைப் பொறுத்தவை அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்விக் கனவை நிறைவேற்ற நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் அனைவரது நிலைப்பாடு. காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி ஆட்சியின்போது, 2010-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நாடு முழுவதும் மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வு தமிழக மாணவர்களைப் பொறுத்தவரை பாதிப்பை ஏற்படுத்தும், அதை திணிக்கக் கூடாது என்பதுதான் ஜெயலலிதா அரசின் நிலைப்பாடு. இதற்காக, தமிழக அரசு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியது, விலக்கும் பெற்றது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.

நீட் தேர்வை ஜெயலலிதா அரசு கடுமையாக எதிர்த்த போதும், அது இருக்கும் வரை தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை அத்தேர்வுக்கு தயார்படுத்தும் பணியையும், அதற்கு ஏற்றார் போன்ற பாடத்திட்டங்களை மாற்றி அமைத்ததோடு, மாவட்டந்தோறும் நீட் தேர்வுக்காக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. மேலும், நீட் தேர்வு குறித்த புரிதலுக்காக வல்லுநர்களைக் கொண்டு ஒரு சிறப்பு கையேடும் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இவ்வித நடவடிக்கைகள் மட்டுமல்லாமல், அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவு மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக, ஜெயலலிதா அரசால் 7.5% இட ஒதுக்கீடும் கொண்டு வரப்பட்டது. இதனால், சுமார் 435 மாணவ, மாணவிகள் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர். இவர்களது 5 ஆண்டுக்கான மருத்துவக் கல்விச் செலவினை ஜெயலலிதா அரசே ஏற்றுக்கொண்டது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் நான் பேசும்போது, ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தீர்களே, என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்டதற்கு, நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், நீட் தேர்வின் பின் விளைவுகளை அறிவதற்கு கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது என்றும், கமிஷனின் பரிந்துரைகளின் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் முதல்வர் பதில் அளித்தார். அதைத் தொடர்ந்து, நான் பேரவையில் நேரடியாக, இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டா? இல்லையா? என்ற கேள்வியை எழுப்பினேன். நீட் இருப்பின் மாணவர்கள் இதற்கு தயாராக வேண்டுமா? வேண்டாமா? என்றும் கேட்டபோது, முதல்வர் இதற்கு நேரடியாக பதில் அளிக்கவில்லை.

தற்போதையை அரசின் இந்த முடிவால், நடப்பு ஆண்டு நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெறுமா? நடைபெறாதா என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டுமா? வேண்டாமா? என்று புரியாமல் தவித்து வருகிறார்கள்.

உச்ச நீதிமன்றத்தினுடைய வழிகாட்டுதலின்படி இந்த ஆண்டு மத்திய அரசு நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்தியே தீரும் என்று அகில இந்திய மருத்துவக் கல்விக் கழகம் அறிவித்துள்ளது. தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றே தீருவோம் என்று வாக்குறுதி தந்த இந்த அரசு நியமித்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான கமிஷன் பரிந்துரைகள் வருவதற்கு முன்பு, தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பதைத் தெளிவுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.