சென்னை:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தர்பார்’ படத்தை வெளியிட தடை கேட்டு மலேசியா நிறுவனம் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இதையடுத்து தர்பார் படத்துக்கு தடை விதிக்கப்படுமா என கேள்விகள் எழுந்துள்ளன.

லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள படம்  ‘தர்பார்’. இந்த படம் ஜனவரி 9ந்தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 30ந்தேதி . மலேசியாவை சேர்ந்த டி.எம்.ஒய். கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள  தர்பார் திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், “ ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்திற்காக லைகா நிறுவனம் ரூ.12 கோடியை ஆண்டுக்கு 30 சதவீதம் வட்டிக்கு கடனாக பெற்றது. வட்டியுடன் சேர்த்து ரூ.23.70 கோடி வழங்கும் வரை தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதற்கு லைகா நிறுவனம் ஜனவரி 2ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

அதன்படி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. லைகா நிறுவனத்தின் பதில் மனுவை தொடர்ந்தே, தர்பார் படம் வெளியாகுமா? அல்லது முடக்கப்படுமா? என்பது தெரிய வரும். இது ரஜினி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.