ஏன் இவ்வளவு அக்கப்போர்?

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குத்தான் இதுவரை இந்தியா பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறது..

இந்திய பாதுகாப்புத்துறை அமைப்புகள் அதன் X தளங்களில் வெளியிடும் அதிகாரபூர்வமான தகவல்களின் முடிவாக,

“IndianArmy remains committed to safeguarding the sovereignity and territorial integrity of the Nation. All nefarious designs will be responded with force”
– என்றும் இதே போன்ற ரீதியிலும்தான் வார்த்தைகளை பிரயோகிக்கிறார்கள்.

இப்படியான காலகட்டங்களில் களத்தில் உள்ள ராணுவத்தினரால் கூட அடுத்து என்ன நடக்கும் என்பதை துல்லியமாக கணித்து விட முடியாது.

ஆனால் எது நேர்ந்தாலும் உடனடியாக பதிலடி கொடுப்பதை நிச்சயம் திறம்பட செய்து முடிப்பார்கள். அந்த நேரத்தில் இப்படித்தான் கையாண்டு தீர வேண்டும் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

தற்போதைய நிலவரம், எதிர் தரப்பு தாக்குதல் கொஞ்சம் கூட குறையாமல் மேலும் மேலும் கூடும் பட்சத்தில் எடுத்தாக வேண்டிய நடவடிக்கைகள், இன்னும் தேவையான உதவிகள் என களத்திலிருந்து இருந்து ராணுவ தலைமைக்கும் அங்கிருந்து அரசின் உயர் மட்டத்திற்கும் தகவல்கள் சொல்லப்படும்.

அதற்கேற்ப கூட்டு முயற்சியுடன் ஆலோசிக்கப்பட்டு அறிவுரைகளும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்படும்.

பெரும்பாலும், ” நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையும் நிலை நிறுத்த, நிலைமையை சமாளிக்க போதுமான ஆயுதங்கள், அவற்றைப் பயன்படுத்தும் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன” என்பதே அந்த அறிவுரை மற்றும் உத்தரவின் சாராம்சமாக இருக்கும்..

இந்த உத்தரவுகளும் அறிவுரைகளும் களத்தில் செயல்பாட்டுக்கு வந்து விளைவுகள் ஏற்பட்ட பிறகுதான், என்ன நடந்தது என்பதே, கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை தெரியவரும்..

எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒரு நாட்டைக் கைப்பற்றியே தீர வேண்டும் என்ற வெறியில் ,”களத்தில் போரிட போகும் நீங்கள் யாரை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்” என்ற மட்டற்ற சுதந்திரத்தை வழங்கும் அந்த காலத்து சர்வாதிகாரியின் உத்தரவிற்கும்,

ஒரு ஜனநாயக நாடு பயங்கரவாத ஒழிப்பு மற்றும் தற்காப்புக்கான நடவடிக்கையில் இறங்கும்போது பிறப்பிக்கப்படும் உத்தரவுக்கும் இதடையே நிறைய வித்தியாசம் உள்ளது.

இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்வது தான் இங்கே பெரும்பாலானோருக்கு பிடித்த விஷயமாக இருக்கிறது.

அடுத்து, தகவல்கள் விவகாரம்.

தீவிரவாதத்திற்கு பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கும்போது ராணுவத்திற்கு நாட்டின் அனைத்து தரப்பும் ஆதரவு தர வேண்டியது கடமை.

ஒவ்வொரு கட்டத்திலும் உடனுக்குடனே விமர்சனங்களை வைப்பது ஆரோக்கியமான போக்கல்ல.. இப்படிப்பட்ட விமர்சனங்கள் ராணுவத்தினரை மனதளவில் சோர்வடைய வைத்து விடும்.

நாட்டின் பாதுகாப்பு என்று வரும்போது ராணுவத்தினரை நம்பித்தான் ஆக வேண்டும்.

நம்மவர்கள் நமக்கானவர்கள் என்று நாம் பெருமதிப்பு வைத்திருக்கும் ராணுவம், எல்லாவற்றையும் உடனுக்குடனே பட்டவர்த்தனமாக சொல்லி ஆக வேண்டும் என்பதெல்லாம் கட்டாயம் இல்லை.

சர்வதேச பார்வை உள்ளிட்ட முக்கியமான விஷயங்களில் சம்பந்தப்பட்ட நாடு விளக்கம் அளித்தாக வேண்டிய பொறுப்பு பற்றியெல்லாம் ராணுவத்திற்கு தெரியாதா?

அதே நேரத்தில் எல்லாம் முடிந்த பிறகு ராணுவத்தின் சாதனைகள் பற்றி பேசப்படும்.

இன்னொரு பக்கம் மோதல் ஏற்படுவதற்கு காரணமான சம்பவத்திற்கு பின்னால் இருந்த அலட்சியங்கள் பற்றியும் விவாதங்கள் தலை தூக்காமல் போகாது..

ஆளும் கட்சியை பிடித்து உலுக்குவதற்காகவே காத்திருக்கும் நாட்டின் எதிர்க்கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை அரசியலாக்காமல் விடாது.

இதற்கு மத்தியில் சர்வதேச அளவில் வெவ்வேறு துறை நிபுணர்களின் அதிர்ச்சிகரமான அலசல்கள்.

ஒரு நாடும் இன்னொரு நாடும் சண்டை போட்டுக் கொண்டால், வெளியே பகிரங்கமாக தெரிவது இரு நாடுகளுக்கு இடையான மோதல்..

ஆனால் திரை மறைவில் அரங்கேறிக் கொண்டிருப்பது அரங்கேறியிருப்பது முக்கிய நாடுகளின் ஆயுத வியாபாரங்களும் அதற்கான சூட்சுமங்களும்.

ஒருத்தர் சொல்வார், “இந்த நாடு ஆயுதங்களை நேரடியாக போர் செய்து சோதிக்காமலேயே உதவுகிறேன் பேர்வழி என்ற போர்வையில் இந்த நாட்டிற்கு இவ்வளவு சப்ளை செய்து ஆயுதங்களின் வல்லமையை பரிசோதித்துப் பார்த்துக் கொண்டது” என்று.

இன்னொருத்தர் சொல்வார், “நேரம் பார்த்து இந்த நாடுகள் இந்த அளவிற்கு ஆயுதங்களை சப்ளை செய்து சம்பாதித்துக் கொண்டன” என்று.

இவற்றிற்கு மத்தியில் நாம் கொஞ்சம் காத்திருப்பது ரொம்ப அவசியம்.

– ஏழுமலை வெங்கடேசன்