சென்னை: தமிழகஅரசு மாணவிகளுக்கு வழங்கும் மாதம் ரூ.1000 யார் யாருக்கு கிடைக்கும் என்பது குறித்த விதிமுறைகளை தமிகஅரசு வெளியிட்டு உள்ளது.

தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரி, பாலிடெக்னிக் அல்லது ஐடிஐயில் சேர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதையடுத்து, தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு பெயர் பதிவு செய்வதற்கான  சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, மாணவிகளின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதே சமயம், தகுதியான மாணவியரின் விவரங்களை penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 30 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய அரசு உத்தரவு பிறப்பிதிருந்தது.

இந்நிலையில்,தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு, மாதம் ரூ.1000 வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

  • அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் நிதியுதவி வழங்கப்படும்.
  • இளநிலை,தொழிற்கல்வி,மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேரும் மாணவிகளுக்கும் நிதியுதவி.
  • இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் செலுத்தபப்டும்.
  • குறிப்பாக,மாணவிகள் ஏற்கனவே வேறு திட்டத்தில் பயன்பெற்று வந்தாலும்,இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவர்.
  • அதே சமயம்,2022-23 ஆம் கல்வியாண்டில் மேற்படிப்பில் புதிதாக சேர்ந்த மாணவிகளும் இத்திட்டத்திற்கு http://penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
  • கல்லூரிகளில் முதலாமாண்டு முடித்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவிகளும்,2 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆம் ஆண்டு செல்லும் மாணவிகளும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் .
  • மேலும், தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் 6 முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று பின் அரசு பள்ளிகளில் சேர்ந்து படித்திருந்தாலும் இத்திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படும்.
  • ஆனால், தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவியருக்கு இந்த நிதியுதவி திட்டம் பொருந்தாது என்றும், அதைப்போல, 2021-22ஆம் கல்வியாண்டில்இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் இத்திட்டத்தில் பயனடைய இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், மாதம் ரூ.1000 பெரும் இத்திட்டம் தொடர்பான விபரங்களுக்கு 14417 என்ற கட்டணமில்லா எண்ணை மாணவிகள் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.