மும்பை: நிலமோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ள நிலையில்,  விசாரணைக்கு ஆஜராக மாட்டேன், என்னை கைது செய்யுங்கள் சிவசேனா எம்.பி.  சஞ்சய் ராவத் தெரிவித்து உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அதிருப்தி எம்எல்ஏக்களை சிவசேனா எம்.பி. தாக்கி பேசி வந்ததுடன், அவர்களது குடும்பத்தினர் இங்கேதானே உள்ளனர் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நிலமோசடி வழக்கு  தொடர்பான விசாரணைக்கு நாளை (28ந்தேதி) ஆஜராகும்படி, சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இச்சம்பவம் அம்மாநில அரசியலில் மேலும், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ராவத்,  “அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை அறிந்தேன். நான் மண்டியிட மாட்டேன். அதிருப்தி எம்எல்ஏக்கள் என்ன செய்தாலும் நான் குவாத்தி செல்லமாட்டேன். நான் எனது கட்சியுடன் தான் இருப்பேன். நான் நாளை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக மாட்டேன். அமாலாக்கத்துறையில் ஆஜராக கால அவகாசம் கோருவேன். ஆனால், நிச்சயமாக விசாரணையை எதிர்கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ED எனக்கு சம்மன் அனுப்பியிருப்பது இப்போதுதான் தெரிய வந்தது. நல்லது! மகாராஷ்டிராவில் பெரிய அரசியல் முன்னேற்றங்கள் உள்ளன. பாலாசாகேபின் சிவசைனிகர்களான நாங்கள் ஒரு பெரிய போரை நடத்துகிறோம். இது என்னை தடுக்கும் சதி. நீங்கள் என் தலையை துண்டித்தாலும், நான் கவுகாத்தி வழியில் செல்ல மாட்டேன்.

என்னை கைது செய்! ஜெய் ஹிந்த்!