சென்னை:

திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சி உள்பட 9 கட்சிகள் இணைந்த மெகா கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணிக்கு மேலும் 14 சிறிய கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.

இந்த நிலையில், திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த  ஸ்டாலின், திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற அதிகாரப்பூர்வ பட்டியல் நாளைக்குள் வெளியாகும் என கூறினார்.

இதுவரை நடைபெற்ற தொகுதிகள் தொடர்பான பேச்ச வார்த்தையில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் தவிர்த்து மற்ற அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுக்கும் எந்தெந்த தொகுதிகள் என இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், இன்று அல்லது நாளை முழுமையாக தொகுதிப் பங்கீடு முடிந்தவுடன், பட்டியல் வெளியிடப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து,  தேர்தல் அறிக்கையும் இன்னும் 2, 3 நாட்களில் வெளியிடப்படும் என்று கூறியவர், அதிமுக கூட்டணியை கடுமையாக சாடினார்.

அதிமுக கூட்டணி, கொள்கை அடிப்படையிலானது அல்ல என்றும், நாரதர் கலகம் நன்மையில் முடியும் என பிரேமலதா கூறியது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, இப்போது நீங்கள் நாரதர் கலகம் செய்கிறீர்களா என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.