கள்ளக்குறிச்சி: ஒரு சொட்டு மது கூட இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று கூறிய பாமக தலைவர் ராமதாஸ், தமிழ்நாட்டில் பாமக ஆட்சிக்கு வரும் போது ஒருசொட்டு மதுகூட இருக்காது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் விரைவில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில்,  உள்ளாட்சி தேர்தல்  பணி தொடர்பாக ஒருங்கிணைந்த கள்ளக்குறிச்சி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில்  நடைபெற்றது.

இந்த  கூட்டத்திற்கு மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் ராஜா வரவேற்றார். மாநில துணை தலைவர் கே.பி.பாண்டியன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஜெகன், தமிழ்வாணன், மாநில மகளிரணி செயலாளர் காசாம்பு பூமாலை, மாவட்ட செயலாளர் சரவணன், மாநில துணைத் தலைவர் மணிகண்டன், முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் ரமேஷ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கியதுடன் சிறப்புரை ஆற்றினார்.   அவர் பேசியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என பா.ம.க. கோரிக்கை வைத்து போராடி வந்தது. இதன் காரணமாக கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக பிரித்துள்ளார்கள். இந்த பெருமை பா.ம.க.வையே சேரும். கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்காக நான் அயராது உழைப்பேன் என உறுதி கூறுகிறேன்.

விரைவில் நடைபெறவுள்ள பேரூராட்சி, நகராட்சி தேர்தலில் பா.ம.க.வுக்கு முழு வெற்றியை தரவேண்டும். நம்மிடம் பணம் இல்லை. ஆனால் மக்களுக்கு சேவை செய்ய நமக்கு நல்ல எண்ணம் உள்ளது. கிராமம், ஒன்றியம், தொகுதி பிரச்சினைகளை தெரிந்து போராடக் கூடியவர்கள் பா.ம.க.வினர். இருப்பினும் நம் கட்சியினருக்கு முதலில் குடும்பம் முக்கியம். பிறகு குடும்பம் நடத்த வருமானம். மீதி இருக்கிற நேரத்தில் கட்சி வேலையை பாருங்கள். விரைவில் மாற்றம் வந்தே தீரும்.

32 ஆண்டுகளுக்கு முன்பு பல போராட்டங்கள் நடத்தி 29 உயிர்களை பலி கொடுத்து 20 சதவீத இட ஒதுக்கீடு வாங்கி உள்ளோம். ஆனால் 108 சாதிகள் இதனை அனுபவித்து வருகின்றன. நாம் போராடி பெற்ற 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வாங்கினால் மற்றவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் கோர்ட்டுக்கு சென்றுள்ளனர்.

இதனை வன்னிய இளைஞர்கள் புரிந்து கொண்டு தம்பி, தங்கைகளை படிக்க  சொல்லுங்கள். குடிக்க வேண்டாம் என சொல்லுங்கள். காவல் நிலையத்தில் யார் மீதும் வழக்கு இருக்கக் கூடாது. நமது ஆட்சி மலர வேண்டும். ஒரு சொட்டு சாராயம் கூட இருக்கக் கூடாது. இதனை இளைஞர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

விரைவில் தமிழகத்தை பா.ம.க. ஆள்வது நிச்சயம். பா.ம.க.வுக்கு ஒருமுறை வாக்களியுங்கள். அதன்பிறகு நாங்கள் என்ன செய்கிறோம் என்று பாருங்கள். மது இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும். அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி அதற்கு ஆட்சிக்கு வரவேண்டும் என்று கூறிய டாகடர் ராமதாஸ், நிச்சயமாக பாட்டாளி மக்கள் கட்சி ஒரு நாள் ஆட்சிக்கு வரும் என்றும் அன்று தமிழகத்தில் ஒரு சொட்டு மது கூட இல்லாத நிலை ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.