மும்பை: ஒமிக்ரான்  வைரஸ் பரவல் எதிரொலியாக மும்பையில் 2 நாட்கள் 144 தடை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரசின் பிறழ்வு தொற்றான, வீரியம்மிக்க தென்னாப்பிரிக்க வைரசான ஒமிக்ரான் இந்தியா உள்பட உலக நாடுகளில் பரவி வருகிறது. இது கொரோனா தொற்றின் 3வது அலையாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து, தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்தியாவில் இதுவரை 25 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடக மாநிலங்களில் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில்  தென் ஆப்பிரிக்காவில் இருந்து துபாய் வழியாக மும்பையை அடுத்த கல்யாண் டோம்பிவிலிக்கு வந்த 33 வயது என்ஜினீயர் ஒமிக்ரான்  தொற்றால் கடந்த 4-ந் தேதி பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. அதுபோல,  நைஜீரியாவில் இருந்து புனேயை அடுத்த பிம்ப்ரி சிஞ்ச்வாட் நகரில் உள்ள சகோதரர் வீட்டுக்கு வந்த 44 வயது பெண், அவரது 2 மகள்களுக்கும் ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதியானது. இவர்கள் மூலம் பெண்ணின் சகோதரர், அவரது 2 மகள்களுக்கும் தொற்று பரவியது. இதனால் ஒரே குடும்பத்தில் 6 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டனர். மேலும் புனே நகரில் ஒருவரும், மும்பையை சேர்ந்த 2 பேரும் இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா பிடியில் சிக்கியதால் மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து இருந்தது.

நேற்று பச்சிளம் குழந்தை உள்பட மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் 3 பேர் மும்பையை சேர்ந்தவர்கள். 4 பேர் புனே மாவட்டம் பிம்பிரி சிஞ்வாட் பகுதியை சேர்ந்தவர்கள். மும்பையை சேர்ந்த 3 பேரும் முறையே 49, 25, 37 வயதுடைய ஆண்கள். இவர்கள் தான்சானியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு சென்று திரும்பியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மராட்டியத்தில் இதுவரை 17 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

இதையடுத்து,  மும்பையில்  இன்றும், நாளையும் (11-ம் தேதி, 12-ம் தேதி ) 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  144 உத்தரவு தடை அமலுக்கு வந்ததால் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள் நடத்தவும்,  4 நபர்களுக்கு மேல் ஒன்று கூடவும் தடை விதிக்கப்படுகிறது.