ஜெயலலிதா வீட்டில் வாக்குவாதம் நடந்ததாக தகவல் வெளியானது என்றும், ஆகவே, அவரது போயஸ்கார்டன் வீட்டில் நடைபெற்ற நிகழ்வுகள் என்னென்ன என்பது குறித்து சந்தேகம் ஏற்படுகிறது என்றும் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும்,   முன்னாள் சபாநாயகருமான பி.ஹெச். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாநகரில் உள்ள தனது இல்லத்தில் இன்று பி.ஹெச். பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

அப்போது அவர், “நினைவிழந்த நிலையில் ஜெயலலிதா  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வந்தது. ஆகவே மருத்துவமனைக்கு சென்றேன்.  அங்கு ஜெயலலிதாவுக்கு பல்வேறு வகையான சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்துக்கு ஜெயலலிதா செல்லப்போவதாகவும் அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தார்கள்.

சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் நன்றாக இருந்தார் ஜெயலலிதா. இந்த நிலையில், திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

இந்த அதிர்ச்சியில் நான் மவுனமாக இருந்தேன். ஆனால் கடந்த 2 நாள்கள் நடந்த நிகழ்வுகள் எனது மவுனத்தை கலைத்துவிட்டது.

மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்படும் முன், அவரது வீட்டில் வாக்குவாதம் நடந்ததாக ஊடகங்களில் தகவல் வெளியானது. அதனால் வீட்டில் நடைபெற்ற நிகழ்வுகள் என்னென்ன என்பது குறித்த சந்தேகம் ஏற்படுகிறது. போயஸ் தோட்ட இல்லத்தில் கீழே விழுந்த ஜெயலலிதா, தனக்கு உதவும்படி கோரினாரா” என்றும் பி.ஹெச். பாண்டியன் சந்தேகக் கேள்வி எழுப்பினார்.

இவரது பேச்சு, மருத்துவமனையில் சேர்க்கப்படும் முன், ஜெயலலிதா மீது தாக்குதல் நடந்ததா என்பது குறித்த கேள்வியை எழுப்புகிறது.