சென்னை: தமிழ்நாடு காவல் ஆணையம் அமைக்க விதிகள் திருத்தப்பட்டதா? என்பது குறித்து 31ந்தேதிக்குள் விளக்கம் அளிக்க தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

காவலர் – பொதுமக்களுக்கிடையேயான உறவை மேம்படுத்தவும், காவல்துறை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்திடவும், புதிய பயிற்சி முறை களைப் பரிந்துரைத்திடவும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.டி. செல்வம்  தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 19ந்தேதி உத்தரவு பிறப்பித்தார்.

தமிழ்நாட்டில், காவல்துறை சித்ரவதை, சிறை மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிராக புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் காவல்துறை புகார் ஆணையம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த 2013ஆம் ஆண்டு தமிழகத்தில் ‘காவல்துறை சீர்திருத்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவல் துறையினருக்கு எதிராக புகார்கள் அளிக்க மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் அமைக்கப்பட்ட ஆணையத்தில் நீதிபதிகள் யாரும் நியமிக்கப்படவில்லை.  இந்த நிலையில், தமிழகஅரசு காவல் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.

ஏற்கனவே காவல்ஆணையம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளர் ஏ.ஜி.மவுரியாவும்,  சரவணன் தட்சிணா மூர்த்தி என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும்  நடைபெற்றது.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில், கடந்த வாரம் காவல்துறை மற்றும் பொதுமக்களிடையே சுமூக உறவு நிலவும் வகையில் புதிய காவல் ஆணையத்தை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் அமைத்துள்ளதாக தமிழக அரசு அறிவித்தது என்று கூறியது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,  உள்துறை செயலாளர் தலைமையில் குழு அமைப்பதற்கான விதிகளை வகுத்துள்ள நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கும் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதா என்பது குறித்து, தமிழக அரசு ஜனவரி 31-ஆம் தேதி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர். மேலும்,  அவ்வாறு விதிகள் திருத்தம் செய்யப்பட்டிருந்தால் அதுதொடர்பான விவரங்களையும், நீதிமன்ற உத்தரவுகளை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

முன்னாள் உயர்நீதிமன்ற  நீதிபதி தலைமையில் புதிய காவல் ஆணையம்! முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!