சென்னை: கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகபட்ச பாதிப்பு சென்னையில் தான் உள்ளது. இநந் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி உரை நிகழ்த்தி வருகிறார். அவர் கூறியதாவது;

கொரோனா வைரஸ் இயல்பு வாழ்கைகையும், பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகம்.

கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறாமல் இருக்க தமிழக அரசு போராடி வருகிறது. சீனாவில் கொரோனா தொற்று என தகவல் வெளியானவுடன் தமிழகத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களில் 86 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தான் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் பணிகள் அளப்பரியது. கொரோனாவுக்கு எதிராக நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அரிசி விலையில்லாமல் வழங்கப்டுகிறது. பயிர்க்கடன், கூட்டுறவு கடன், மின்கடன் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அம்மா உணவகம் மூலம் தினமும் 8 லட்சம் பேருக்கு சுகாதார உணவு வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கூடுமானவரை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களுக்கு வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும். ஜனவரி மாதம் முதலே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன என்றார்.