நெல்லை: பிரிட்டிஷாரை எப்படி விரட்டி அடித்தோமோ, அதேபோன்று எவ்விதமான வெறுப்பும் கலவரம் இன்றி  மோடியை நாக்பூருக்கு திருப்பி அனுப்புவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாளையங்கோட்டை புனித சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியில் கல்வியாளர்கள், பேராசிரியர்களுடன் கலந்துரையாடினார். பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த ராகுல் காந்தி கலந்துரையாடல் வடிவில் கற்றல் கற்பித்தல் பணிகள் இருக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

அவர் மேலும் பேசியதாவது: கல்வித்துறைக்கான முழு அதிகாரமும் மத்திய அரசிடம் இருக்கக்கூடாது. முழு அதிகாரமும் மத்திய அரசிடம் இருப்பதால் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது. தமிழ்நாடு வெற்றி நடைபோடுகிறது யார்? தமிழகத்தில் மூன்று பேர் மட்டுமே தமிழகத்தில் வெற்றி பெற்று இருக்கின்றனர்.

குறிப்பாக, நாட்டின் மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் வகையில் மத்திய அரசு இந்துத்துவா கொள்கையை கொண்டுள்ளது. மேலும், மத்திய அரசு சில குறிப்பிட்ட மதத்தினரை பேச அனுமதி மறுக்கிறது. ஒரு சமூகம் முன்னேற வேண்டுமென்றால் தங்களுக்கு உரிய மரியாதை அங்கீகாரம் கொடுக்கப்படவேண்டும்.

ஆனால் அந்த அங்கீகாரம் பாஜக ஆட்சி கொடுப்பத்தில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு உரிய மரியாதை அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 70 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷாரை எப்படி விரட்டி அடித்தோம், அதேபோன்று எவ்விதமான வெறுப்பும் கலவரம் இன்றி நரேந்திர மோடி நாக்புருக்கு திருப்பி அனுப்புவோம் என்று தெரிவித்தார்.