சென்னை: திருநங்கையர்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணம் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் பெண்களுக்கு சாதாரண பேருந்துகளில் இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்றதும்,  அதற்குறிய போப்புகளில் கையெழுத்திட்டு முதலாவது அறிவித்தார். இது பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையடுத்து, பெண்களுடன், திருநங்கைகளுக்கும் இலவச பஸ் பயண திட்டத்தை அறிவித்தால் நன்றாக இருக்கும் என்று இந்துஜா ரகுநந்தன் என்பவர் டிவிட் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு கு கோரிக்கை வைத்திருந்தார்.

இதற்கு பதில் அளித்து பதிவிட்டுள்ள ஸ்டாலின்,  மகளிர் நலன் – உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம். தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி. பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்  என கூறியுள்ளார்.