சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக, அதிமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்சி வளர்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்? என பாஜகவை எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு என இரு தரப்பினரும் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்திய நிலையில், கூட்டணி கட்சியான பாஜக இரு அணியினரும் ஒன்றிணைந்து செயலாற்ற அழைப்பு விடுத்தது. ஆனால், அதை இபிஎஸ் ஏற்க மறுத்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பின்படி, தனது ஆதரவு வேட்பாளரையே அதிமுக வேட்பாளராக அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் பாஜக கேம் ஆடுவதாக ஓபிஎஸ் தரப்பு குற்றம் சாட்டியிருந்தது. ஆதரவு கேட்டு போது சரியான முறையில் நடத்தவில்லை எ;னறும்,   ஓ.பன்னீர்செல்வத்தை அண்ணாமலை அவமதித்ததாக ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில்,  நெல்லையில் திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டஎதிர்கட்சித்தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான  எடப்பாடி பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  அதிமுகவில் மட்டும்தான் சாமானியர் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்றவர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

சமீபத்தில் பெய்த மழையால் டெல்டா பகுதிகளில் பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியவர், பயிர் இழப்பீடு விவகாரத்தில் திமுக, எதிர்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சும், ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சும் பேசுகிறது என விமர்சித்தார்.

பின்னர் செய்தியளார்களின் கேள்விக்கு பதில் கூறியவர், தற்போதைய நிலையில், அதிமுக தான் பல கட்சிகளை தாங்கி பிடித்து வருகிறது. அதிமுகவுக்கு யாரும் உதவவில்லை, அதிமுக தான் பிற கட்சிகளுக்கு உதவுகிறது என கூறியவர்,

பாஜக தொடர்பானகேள்விக்கு அடுத்த கட்சி வளர்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்? தற்போது பாஜக எங்கள் கூட்டணியில் தான் உள்ளது. எங்களின் கூட்டணி தொடரும்.  நாடாளுமன்ற தேர்தல் வரும்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்போம் என்றார்.

திமுக கூட்டணியால் திமுக மட்டுமே வளர்கிறது. மற்ற கட்சிகள் எல்லாம் தேய்ந்துகொண்டிருக்கிறது,. திமுக அரசு  மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்டவைகளுக்கு எதிராக திமுகவின் கூட்டணி கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எல்லாம் திமுகவிற்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டனர். இன்னும் கொஞ்ச நாட்களில் அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் காணமால் போய் விடும் என்றும் கூறினார்.

கடந்த 21 மாதங்களாக திமுக ஆட்சி மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. திமுக அரசின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கவில்லை. சிலிண்டர் மானியம் கொடுக்கவில்லை. பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை.

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, ரவுடிகளின் அட்டூழியம் அதிக அளவில் அதிகரித்து உள்ளது. பாலியல் குற்றம் அதிகரித்துள்ளது. போதை பொருள் இளைஞர்களிடத்தில் அதிகரித்துள்ளது. காவல்துறை வாகனத்தை திருடும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கொட்டுள்ளது என கடுமையாக விமர்சித்தார்.