சென்னை: பெண் குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ள, பிரபல யுடியூபர் பப்ஜி மதனை தீவிரமாக தேடிவருகிறோம் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்  தெரிவித்து உள்ளார்.

பங்ஜி ஆன்லைன் விளையாட்டு யயுடியூப் சேனலில் ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டது தொடர்பான புகாரில் பப்ஜி மதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரை கைது செய்ய காவல்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், அவர் திடீரென தலைமறைவான நிலையில்,  அவரது மனைவியும், யூடியூப் சேனலின் நிர்வாகியுமான கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து அவரை சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக, கிருத்திகாவை நீதிமன்றக் காவலில் ஜூன் 30ஆம் தேதிவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் கிருத்திகா  சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ”தலைமறைவாக உள்ள பப்ஜி மதனை தீவிரமாக தேடிவருகிறோம். சமூக வலைதள குற்றங்களைக் கண்டறிய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழக்கில் சட்டரீதியாகவே நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.