சென்னை

மூன்று நாள் பயணமாகச் சென்னை வந்துள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை பிரதமர் மோடி தமிழகத்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாகச் சென்னைக்கு  வருகை தந்தார். தனி விமானம் மூலம் பெங்களூரில் இருந்து சென்னை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நேப்பியர் பாலம் அருகே அமைந்துள்ள ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு வந்தார். பிறகு கார் மூலம் விழா நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கத்துக்குச் சென்ற மோடிக்கு வழிநெடுக திரண்டு இருந்த பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மோடி அவர்களின் வரவேற்பை ஏற்கும் விதமாக கைகளை அசைத்தபடி சென்றார்.

பிரதமர் மோடி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைக்க உள்ளார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னையில் 22 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டு உள்ளனர். எனவே விமான நிலையம், பிரதமர் தங்கும் ஆளுநர் மாளிகை, அவர் சாலை மார்க்கமாகச் செல்லும் பகுதிகள், நிகழ்ச்சி நடைபெறும் பகுதி போன்றவற்றில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.