அஜித்தின் ‘விவேகம்’  திரைப்படத்தின் ரசிகர் காட்சி இன்று  அதிகாலை 4 மணிக்குத் திரையிடப்பட்டது. இதையடுத்து ரசிகர்கள் இரவு இரண்டு மணியில் இருந்து திரையரங்குகளில் திரண்டனர்.

சென்னையில்  ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் மிக அதிக அளவில் இருந்தது. அங்கு காவல்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதனால் படம் திரையிடுவதில் தாமதமானது.

சென்னை சைதாப்பேட்டை ராஜ் திரையரங்கில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.  எழும்பூர் ஆல்பர்ட் மற்றும் வடபழனி ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்குகளில் அதிகாலைக் காட்சிகள் திரையிடப்படவில்லை. ஆனாலும் அஜீத்  ரசிகர் மன்றங்கள் சார்பாக பெரும் கட்-அவுட்கள், செங்கோட்டை வடிவிலான அலங்கார வளைவு, பிரம்மாண்டமான  போஸ்டர்கள், வாழை மரம் மற்றும் மாவிலை அலங்காரங்கள்  கட் அவுட்டுக்கு  பாலபிஷேகம் என்று ரசிகர்கள் கொண்டாடினர்.