மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், கலை இயக்குநராக தோட்டா தரணி, எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

ஒரே ஒரு போஸ்டரை மட்டும் வெளியிட்டுவிட்டு, ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதால், தனியாக போஸ்டர் வெளியிடப்படாமல் இருந்தது. சமீபத்தில் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்துக்கான போஸ்டரைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். 2022-ம் ஆண்டு வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.

ரூ. 800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை 70 சதவீதம் முடிந்துள்ள நிலையில், இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை மத்திய பிரதேசத்தில் நடத்தவுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

அருள்மொழி வர்மன் பாத்திரத்தில் நடித்து வந்த ஜெயம் ரவி சமீபத்தில் தனது படப்பிடிப்பை நிறைவு செய்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் விக்ரம் தனது படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களுக்கும் தன் பகுதி காட்சிகளை நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.