சென்னை: விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகாரின் பேரில், வழக்கின் விசாரணைக்கு நேரில் வரும் 27-ம் தேதி ஆஜராகுமாறு சென்னை போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நாளை மறுநாள் (பிப்.27) நேரில் ஆஜராகும்படி சீமானுக்கு வளசரவாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
கடந்த 2011ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி என்பவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராகசென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளி்த்திருந்தார். இதையடுத்து, சீமான் மீது, காவல்துறையினர் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்தனர். ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
இதையடுத்து, தனது புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என விஜயலட்சுமி தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையில், சீமான் தரப்பிலும், தன்மீதான பாலியல் வழக்கை வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வழக்கை ரத்து செய்ய மறுத்ததுடன், ‘‘இந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. விஜயலட்சுமி புகாரை திரும்பப் பெற்றாலும்கூட பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது. இந்த வழக்கில் போலீஸார் 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து, போலீஸார் மீண்டும் விசாரணையில் இறங்கி உள்ளனர். முதல்கட்டமாக வரும் 27-ம் தேதி நேரில் ஆஜராகும்படி வளசரவாக்கம் போலீஸார் சீமானுக்கு நேற்று சம்மன் அனுப்பி உள்ளனர்.