சென்னை: தேமுதிக நிறுவன தலைவரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான விஜயகாந்த், தனது பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களை சந்திக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம் என தேமுதிக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்த விஜயகாந்த்  மூத்த மகன் விஜயபிரபாகரன், இளைய மகன்சண்முக பாண்டியன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,    “கேப்டன் விஜயகாந்தின் உடல்நலத்தில் சற்று பின்னடைவு தான், ஆனால் கேப்டன் விஜயகாந்த் 100 வருடம் நல்லா இருப்பார், அவர் பழையபடி பேசுவார், எழுந்து வருவார் அதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம் என்று கூறியிருந்தனர்.

இந்த செய்தி பரபரப்பானது. இதன் காரணமாக ஏராளமானே தேமுதிக தொண்டர்கள் தேமுதிக தலைமை அலுவலகம் முன்பும், விஜயகாந்த் வீடு முன்பும் குவியத்தொடங்கினார். அவர்களை குடும்பத்தினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இநத் நிலையில், விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாக, வதந்திகளை நம்பவேண்டாம்… விஜயகாந்த் நாளை தொண்டர்களை சந்திக்கிறார் என தேமுதிக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கேப்டன் விஜயகாந்த்  பிறந்தநாளை முன்னிட்டு  நாளை தொண்டர்களை சந்திக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக விஜயகாந்த் பெயரில்  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  2005 ஆம் ஆண்டு தேமுதி கழகம் தொடங்கப்பட்ட பிறகு 2006 ஆம் ஆண்டு ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்தநாளை “வறுமை ஒழிப்பு நாளாக” கடைப்பிடித்து வருகிறேன். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் என் வழியைப் பின்பற்றி அவர்களால் முடிந்த அளவிற்கு மக்களுக்கான நல உதவிகளை “இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே” என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து, ஒவ்வோரு ஆண்டும் செய்து வருகிறார்கள். இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று, அவர்களின் வறுமையை ஒழிக்கும் முயற்சியில் தேமுதிக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும் என்பதே எனது குறிக்கோள். தமிழக மக்கள் மனதில் நாம் நீங்கா இடம்பிடித்துள்ளோம். என் மீது அன்புகொண்ட தமிழக மக்களுக்கும், என் தாய்மார்களுக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என்றென்றும் நான் கடமைப்பட்டுள்ளேன். அதே நேரத்தில் தமிழக மக்கள் தங்கள் நல்ஆதரவையும், ஒத்துழைப்பையும் வருகின்ற மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய உடல்நலம் குறித்த வதந்திகளை யாரும் நம்பவேண்டாம். நான் நலமுடன் இருக்கிறேன். கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை கழகத்தில் எனது பிறந்தநாளில் நாளை (ஆக 25) காலை 10 மணிக்கு கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் நேரில் சந்திக்கவுள்ளேன். என்னை சந்திக்க வரும் கழக தொண்டர்கள் யாரும் பொக்கே, சால்வை, மாலை போன்ற அன்பளிப்புகளை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.