சென்னை

பிரபல திரைப்பட நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 18 ஆம் தேதி  நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் நுரையீரலில் சளி மற்றும் இருமல் தொந்தரவு காரணமாகச் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.  கடந்த 11 ஆம் தேதி மருத்துவச் சிகிச்சையில் உடல்நலம் தேறிய நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

விஜயகாந்த் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தேமுதிக தலைமை அலுவலகம் தெரிவித்து இருந்தது.  தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தே.மு.தி.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது”

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.