சென்னை

பாஜகவில் இணைந்த விஜயதரணி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சில முக்கிய தலைவர்கள் தங்களது சொந்த கட்சியை விட்டுவிட்டு எத்திரணிக்குத் தாவி வருகிறார்கள். நேற்று தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் சட்டமன்ற உறுப்பினர். விஜயதரணி திடீரென பாஜகவில் சேர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து 3 முறை குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்ட விஜயதரணி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்தி என்ற அடையாளத்தோடு தேர்தலில் களம் இறங்கி மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.

சமீபகாலமாகக் காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்து வந்ததால் அவர் பாஜகவில் சேரப் போவதாகத் தகவல்கள் பரவின. அதை காங்கிரசார் மறுத்து வந்த நிலையில் விஜயதரணி நேற்று திடீரென டெல்லியில் உள்ள பா.ஜ. க தலைமை அலுவலகத்துக்குச் சென்று, தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.

கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி, ஒரு அரசியல் கட்சியின் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியில் இருந்து வேறு அரசியல் கட்சிக்குத் தாவினால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டு விடும் என்ற விதியின் அடிப்படையில் விஜயதரணியின் சட்டமன்ற உறுப்பினர். பதவியை உடனடியாக தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பி இருந்தார்.

விஜயதரணி தமிழக காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர். மட்டுமல்லாமல் அக்கட்சியின் சட்டசபை கொறடாவாகவும் இருந்தார். பொதுவாக ஒரு கட்சியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர். யாரும் விலகி வேறு கட்சியில் சேர்ந்தால், அவர் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யும்படி சபாநாயகருக்கு அந்தக் கட்சியின் கொறடாதான் கடிதம் கொடுப்பார். தற்போது கொறடாவே கட்சி தாவி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய விஜயதரணி, தனது சட்டமன்ற உறுப்பினர். பதவியை ராஜினாமா செய்வதாகச் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.