தேனி:
தேனி பழைய பேருந்து நிலையத்தில் செயல்படும் அம்மா உணவகத்தில் உணவின் தரம் பற்றி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், சந்தைகள் மற்றும் அம்மா உணவகங்கள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. நேற்று சென்னை மயிலாப்பூர், பட்டினபாக்கம் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு திடீர் ஆய்வு பயணம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உணவு சுகாதாரமான முறையில் சமைக்கப்படுகிறதா என்பது குறித்து பார்வையிட்டார். பின்னர் அங்கு உணவு அருந்த வருபவர்களிடம் நிறை, குறைகளை கேட்டறிந்தார்.

இந்நிலையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் கொரோனா பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். சந்தைகளில் சமூக இடைவெளி பேணுதல் உள்ளிட்டவற்றை பார்வையிட்ட அவர், அங்குள்ள அம்மா உணவகத்திற்கு சென்று உணவின் தரம், சுகாதாரம் குறித்து பார்வையிட்டதுடன், இட்லிகளை சாப்பிட்டு பரிசோதித்துள்ளார்.

மேலும், இட்லி, பொங்கல் சாப்பிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து 28 மளிகைப் பொருட்கள் ரூபாய் 2 ஆயிரத்துக்கு வீடு தேடி வரும் திட்டத்தையும் துணை முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும் உழவர் சந்தையில் ரூபாய் 150-க்கு காய்கறிகள் பொட்டலங்கள் தயாரிக்கப்படுவதையும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது துணை முதல்வருடன் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

நேற்று சென்னை மயிலாப்பூர், பட்டினபாக்கம் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு திடீர் ஆய்வு பயணம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உணவு சுகாதாரமான முறையில் சமைக்கப்படுகிறதா என்பது குறித்து பார்வையிட்டார். பின்னர் அங்கு உணவு அருந்த வருபவர்களிடம் நிறை, குறைகளை கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.