மதுரை: புதுக்கோட்டை, வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் – விசாரணையை கண்காணிக்க, ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவுசெய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி தொடக்கப்பட்ட வழக்கில் சிபிசிஐடி-யை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

வேங்கைவயலில், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில், மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பான விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிடக்கோரி, நெடுவாசல் பகுதியைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த விசாரணையின்போது, சிபிஐ விசாரித்தால் மட்டும் என்ன ஆகப்போகிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை என்ன வென்றே தெரியவில்லை என்று கூறியதுடன்,  தமிழ்நாடு காவல்துறையிடம் தேவையான மனித வளம் உள்ளதாகவும், CBI-க்கு மாற்றினால் தேவையான மனிதவளம் இல்லை எனத் தெரிவிப்பார்கள் என்றும் தெரிவித்தனர்.  அதனைத்தொடர்ந்து, கல்வி அறிவால் ஏற்படும் விழிப்புணர்வால் மட்டுமே இது போன்ற சம்பவங்களைத் தடுக்க முடியும் என நீதிபதிகள் தெரிவித்ததுடன், தற்போதைய நிலைகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி காவல்துறைக்கு உத்தரவிட்டு,  வழக்கை ஒத்தி வைத்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது,   குடிநீர்தேக்க  தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பான விசாரணையைக் கண்காணிக்க, ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.