பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம் திட்டத்துக்கு வேண்டாம் என்ற பெயருடைய மாணவி மாவட்ட தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை நேரில் அழைத்து கலெக்டர் கவுரவித்தார்.

திருவள்ளூர் அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே உள்ளது நாராயணபுரம் கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் தங்களுக்கு அடுத்தடுத்து பெண் குழந்தை பிறந்தால் கடைசியாக பிறந்த பெண் குழந்தைக்கு ‘வேண்டாம்’ என்று பெயர் வைப்பார்கள்.

அப்படி வைத்தால் அடுத்து ஆண் குழந்தை பிறக்கும் என்பது இந்த கிராமத்தில் உள்ளவர்களின் நம்பிக்கை. இந்த கிராமத்தில் உள்ள அசோகன் மனைவி கவுரி என்பவருக்கு சன்மதி, யுவராணி என்ற இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். 3வதாக பிறந்த பெண் குழந்தைக்கு ‘வேண்டாம்’ என்று பெயர் வைத்தனர். ஆனால் அடுத்ததாக பிறந்ததும் பெண் குழந்தை அதற்கு சரண்யா என்று பெயர் சூட்டினர்.

இதற்கிடையே ‘வேண்டாம்’ என்ற அந்தப் பெண் குழந்தை அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் சென்னை அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஸ்காலர்ஷிப் உதவியோடு பொறியியல் படிப்பில் சேர்ந்தார். பள்ளியில் படிக்கும் போதே சக மாணவ – மாணவிகள் வேண்டாம் என தன் பெயரை சொல்லி கிண்டல் செய்கின்றனர் என்றும், தற்போது கல்லூரியில் படிக்கும்போதும் கிண்டல் செய்கின்றனர் என்றும் பெற்றோரிடம் அவர் தெரிவித்து வந்தார்.

அதற்கு அவரது பெற்றோர் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் பெயரை மாற்றிக்கொள்ளலாம் என்று ஆறுதல் சொல்லி வந்தனர். கல்லூரியில் தற்போது ‘வேண்டாம்’ 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் அவர் உருவாக்கிய தானாகவே இயங்கக்கூடிய கதவின் விளக்கத்தை ஜப்பான் நாட்டின் தனியார் நிறுவனத்திடம் விளக்கினார். இந்த விளக்கத்தைக் கேட்ட ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் இவரை வேலைக்கு தேர்ந்தெடுத்தது. மேலும் அவருக்கு ஜப்பான் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ. 22 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்தது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ‘வேண்டாம்’ என்ற அந்த மாணவியை அழைத்து பாராட்டினார். மேலும் அவரை ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம்’ என்ற திட்டத்தில் மாவட்ட சிறப்புத் தூதுவராக நியமித்து வாழ்த்து தெரிவித்தார்.