பெங்களூரு:
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகளான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று சசிகலாவும், இளவரசியும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 47வது கூடுதல் குடிமை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவவர்களை சிறையில் அடைக்க நீதிபதி அஸ்வத் நாராயண் உத்தரவிட்டார்.
சிறையில் மாலை 6.30க்கே இரவு உணவு அளிக்கப்பட்டுவிடும். மருத்துவோ சோதனைகளுக்குப் பிறகு சசிகலா, இளவரசி இருவரும்  6.30க்குப் பிறகே சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
ஆனாலும் அவர்களுக்கான உணவு தயாராக இருந்தது. இருவருக்கும் தலா 2 சப்பாத்திகள், 150 மி.லி சாம்பார் வழங்கப்பட்டுள்ளது.  அதோடு 400 கிராம் அளவுள்ள கேழ்வரகு களியும் அளிக்கப்பட்டது.
பகல் நேரத்தில் தலா 400 கிராம் சாதம், 400 கிராம் கேழ்வரகு களி உருண்டை அளிக்கப்படும். அதோடு சாம்பாரும்  200 மி.லி. மோரும் அளிக்கப்படும். .

“கடந்த முறை ஜெயலலிதாவுடன்  சிறைதண்டனை பெற்று இருந்தபோது வெளியில் இருந்து  உணவு வந்தது.  ஆனால் இம்முறை அதற்கு வாய்ப்பு இல்லை.  ஆகவே தண்டனைக்காலமான நான்கு வருடங்களும் சசிகலா சிறை உணவைத்தான் சாப்பிட வேண்டும். இன்று தனது முதல் சிறை உணவை அவர் சாப்பிட்டார்.” என்று சிறைத்துறை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.