சென்னை: நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை தொடங்க உள்ள நிலையில், சென்னை உள்பட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகள் பரபரப்பாக காணப்படுகிறது. வாக்குப்பதிவுக்கு வாக்காளர்கள், வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட 11 ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மையங்கள், மற்றும் பல பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் நடைபெறாமல் இருக்கும்,  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை (பிப்ரவரி 19) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3,843 நகராட்சி கவுன்சிலர், 7,621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு இந்த தேர்தல் நடக்கிறது.  இதற்காகக மாநிலம் முழுவதும் ஒரேகட்டமாக 31 ஆயிரத்து 150 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கும், அ.தி.மு.க. கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. சுமார் 2 கோடியே 79 லட்சத்து 56 ஆயிரம் பேர்  வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.  வாக்குப்பதிவை தொடர்ந்து,  வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி நடைபெற உள்ளது. பின்னர், தேர்ந்தெடுக்கபட்ட உறுப்பினர்களின் பதவியேற்பும், மேயர் பதவிக்கான தேர்தலும் மார்ச் 2 ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட அனைத்து பிரசார நிகழ்ச்சிகளும், வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணி நேரத்துக்கு முன்னதாக முடித்துக் கொள்ள வேண்டும் என்பதால், நேற்று மாலை 6 மணியுடன்  தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. இதையடுத்து நள்ளிரவில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாகவும், இலவசங்கள் வழங்கப்படுவதாகவும் கோவை உள்பட பல பகுதிகளில் புகார்கள் எழுந்தன.  இதையடுத்து, பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் நேற்று மாலை 6 மணி முதல் விடியவிடிய தேர்தல் பறக்கும் படையினருடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். தேர்தலுக்கு சம்பந்தம் இல்லாத வெளியாட்களும் வெளியேற்றப்பட்டனர்.

நள்ளிரவு 1 மணி வரை நடந்த அதிரடி வேட்டையில் தேர்தல் விதிகளை மீறி பணம் பட்டுவாடா செய்த நபர்களை பறக்கும்படையினர் பிடித்து பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதனை விடியவிடிய நடைபெற்றது. கோவையில் 10 அட்டை பெட்டிகளில் இருந்த 960 ஹாட் பாக்ஸ்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.35 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் சில பகுதிகளில் பரபரப்பு காணப்படுகிறது. குறிப்பாக வடசென்னையில் சில பகுதிகள் மற்றும் கோவையிலும் ஏராளமான புகார்கள் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், லாட்ஜ்கள், ரிசார்ட்கள் என அனைத்து இடங்களிலும் நேற்று மாலை முதல் அதிகாலை வரை போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். பணப்பட்டுவாடாவை தடுக்க மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுப் படி துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு முதல் விடியவிடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்த தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 1.13 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  74 ஆயிரம் போலீஸார், தமிழக சிறப்பு காவல் படையினர் 8 ஆயிரம் பேர், ஊர்க்காவல் படையினர் 14 ஆயிரம் பேர் என தமிழகம் முழுவதும் 96 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

வாக்களிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ள  11 ஆவணங்கள்

வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக்கொண்டும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றலாம். அதன்படி,

ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம் அல்லது அஞ்சலக கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், தேசிய மக்கள் பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகிய 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.