சென்னை: முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா பிப்ரவரி 28ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விழாவில் பங்கேற்க  மம்தா, அகிலேஷ் உள்பட எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் புத்தகம் எழுதி வருகிறார். இந்த புத்தகத்தின் முதல் பாகம் இம்மாத இறுதியில் வெளியாகும் என கூறப்பட்டது. இதை உறுதி செய்யும் வகையில், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் சென்னை புத்தகக் காட்சியை நேற்று முன்தினம்  (16-ம் தேதி) தொடங்கி வைத்து உரையாற்றியபோது கூறினார். அப்போது,  நான் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூலின் முதல்பாகம்  வெளியிடப்பட உள்ளது. இந்த புத்தகத்தில் எனது வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகளை  பதிவு செய்துள்ளேன். எனது இளமைக் காலம், பள்ளிப்படிப்பு, கல்லூரிக் காலம், அரசியல் ஆர்வம், முதலில் நடத்திய கூட்டம், முதல் பேச்சு, திரையுலகம், திருமணம், மிசா காலத்தின் தொடக்கம் வரையிலான பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அதாவத கடந்த 1976 வரையிலான பதிவுகளுடன் முதல் பாகமாக அதை எழுதியுள்ளேன். இந்த புத்தகம்  விரைவில் புத்தகக் காட்சிக்கும் அந்த நூல் விற்பனைக்கு வரும்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து, ‘உங்களில் ஒருவன்’ புத்தகம் வரும் 28ந்தேதி வெளியிடப்படுகிறது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிப்ரவரி மாதம் 28-ம் தேதி நடைபெறும் விழாவில், இந்த நூல் வெளியிடப்பட உள்ளது. நூல் வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள்தேசிய தலைவர் ராகுல் காந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார். அத்துடன், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.