சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட விரும்பு வோருக்கான விருப்பமனு டிசம்பர் 1ந்தேதி முதல்  விநியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சிகளுக்கு தேர்தல் நடை பெற உள்ளது. இதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ள மாநில தேர்தல் ஆணையம் இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி முதல் கட்டமாக நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது.
இதையொட்டி, திமுக தலைமை ஏற்கனவே விருப்பமனு விநியோகம் குறித்த தகவல்களை வெளியிட்டு உள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பிலும் விருப்ப மன விநியோகம் குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட விரும்புகிறவர்கள் வருகிற 1.12.2021 புதன்கிழமை காலை 10 மணி முதல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களில் வழங்கப்படுகிற விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தேர்தலில் போட்டியிட விரும்புகிற பொது பிரிவினர் ரூ.1000, பட்டியலினத்தவர்கள் மற்றும் மகளிர் ரூ.500 என்கிற கட்டணத்தை செலுத்தி விருப்ப மனுக்களை வழங்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அன்றைய தேதியில் அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் நியமிக்கப்பட்ட மாநில பொறுப்பாளர்கள் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
சென்னை மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் அன்றைய தினம் சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்களை வழங்கலாம். இதை அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் இணைந்து பெற்றுக் கொள்வார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.