லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று இறுதிக்கட்ட மற்றும் 7வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9மணி நிலவரப்படி 8.58% வாக்குகள் பதிவான நிலையில், காலை 11மணி நிலவரப்படி 21.55% வாக்குகள் பதிவாகி இருந்தன. பிற்பகல் 3மணி நிலவரப்படி, 46.40% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

உத்தரபிரதேசத்தில்  இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கு  ஏற்கனவே 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்று 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி உள்ள, ஜான்பூர், காசிப்பூர் மற்றும் அகிலேஷ் யாதவின் மக்களவைத் தொகுதியான ஆசம்கர் தொகுதிகள்  உள்பட 9 மாவட்டங்களைச் சேர்ந்த 54 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த 54 தொகுதிகளில்  613 பேர் போட்டியிடுகின்றனர்.

காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு  நடைபெறும். சில இடங்களில் விறுவிறுப்பாகவும் சில இடங்களில் மந்தமாகவும் நடைபெற்று வருகிறது.  அதிகபட்சமாக சண்டௌலி – (50.75%), சோன்பத்ரா – (49.82%) மற்றும் பதோஹி – (47.50%) தொகுதிகளில் அதிகபட்ச வாக்குப்பதிவு நடந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, வருகின்ற 10 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன.