சென்னை: தமிழ்நாட்டில் இன்று 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் நிலையில், சீல் இல்லாத 12ம் வகுப்பு சான்றிதழ் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என  அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என கூறப்பட்டது. அதன்படி 10,11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களில் 70 சதவீதம், பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் என்ற விகிதத்தில் மாணவர்களுக்கான இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியான நிலையில், இன்று  மாணவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி,  மாணவர்கள் பதிவிறக்கம் செய்யும் சான்றிதழில் அரசின் அங்கீகார சீல் இல்லாமல் இருந்தது, இதனால், வேறு மாநிலங்களில் தமிழக மாணவர்கள் சேருவதில் சிக்கல் நிலவுவதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் 12ஆம் வகுப்பு சான்றிதழில் அரசின் அங்கீகார சீல் இல்லாதது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.