கோவை: மே 23ந்தேதி முதல் கோவை மேட்டுப்பாளைய இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ்  ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. சிறப்பு ரெயில் (06813) வரும் 23ந் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சேலம் கோட்ட ரெயில்வே  வெளியிட்டுள்ள தகவலில்,  கோவை-மேட்டுப்பாளையம் இடையே ஏற்கனவே 2 முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் கோரிக்கையை ஏற்று, 3-வதாக கோவை-மேட்டுப்பாளையம் இடையே முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (06816) வருகிற 23-ந் தேதி முதல்  இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது  ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயக்கப்படும்.

கோவை ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மாலை 4.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.  மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு, காலை 11.40 மணிக்கு கோவை ரெயில் நிலையம் வந்தடையும்.

இந்த ரெயில்கள், கோவை வடக்கு, துடியலூர், பெரியநாயக்கன் பாளையம், காரமடை ரெயில் நிலையங்களில் தலா ஒரு நிமிடம் நின்று செல்லும்.  இந்த ரெயிலில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படும். எனவே இந்த வழித்தடத்தில் தினமும் பயணிப்போர் ரூ.185 செலுத்தி சீசன் டிக்கெட் பெற்று கொண்டு, கோவை- மேட்டுப்பாளையம் இடையே பயணிக்கலாம்.

இதுதவிர 3 மாதங்களுக்கும் சேர்த்து ரூ.500 செலுத்தி சீசன் டிக்கெட் பெற்றும் பயணிக்கலாம். சீசன் டிக்கெட் பெற விண்ணப்பத்துடன் ஒரு புகைப்படம், ஆதார் அட்டை நகலை அளித்தால் போதுமானது. அவர்களுக்கு அடையாள அட்டையுடன் சீசன் டிக்கெட் வழங்கப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.