நீடாமங்கலத்தில் தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து ரயில் ஒன்றை கவிழ்க்க சதி நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

நீடாமங்கலத்தில் தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து சென்னை ரயிலை கவிழ்க்க சதிதிட்டம் நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு பல்வேறு விரைவு ரயில்கள், பயணிகள், சரக்கு ரயில்கள் தினந்தோறும் வந்து செல்கிறது. நேற்று இரவு 9 மணியளவில் மன்னார்குடியிலிருந்து கோவை விரைவு ரயில் (செம்மொழி) நீடாமங்கலம் வந்து இன்ஜினை கழட்டி இன்னொரு தண்டவாளம் வழியாக வந்து முன்புறம் உள்ள ரயிலை கோர்த்து இழுத்து செல்லும். அப்போது, முன்புறம் போகும் போது டிராக்கில் மிகப்பெரிய பாறாங்கல் இருந்ததை டிரைவர் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே  ஸ்டேசன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்தார்.

அங்கிருந்த பணியாளர்கள் சென்று பாறாங்கலை தூக்கிய பிறகு இன்ஜின் வந்து ரயிலை இழுத்து கொண்டு கோவை சென்றது. ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். நீடாமங்கலம் ரயில் தண்டவாளத்தில் கடந்த ஆண்டும் இதேபோன்று மூன்று இடங்களில் தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க  முயற்சி நடந்தது. இதனால், லோ பிரிட்ஜ் அருகில் கண்காணிப்பு கேமரா ஒன்று வைக்கப்பட்டது. அந்த கேமரா செயல்படவில்லை.