ச்சிப்பிள்ளையார் திருக்கோவில், திருச்சி மாவட்டம், மலைக்கோட்டையில் அமைந்துள்ளது.

மகாவிஷ்ணு ராமாவதாரத்தில், ராவணனை வதைத்து சீதையை மீட்டு அயோத்தி சென்றார். விபீஷணன், சுக்ரீவன் மற்றும் அனுமன் ஆகியோரும் உடன் சென்றனர்.

அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் முடிந்து, அவரிடம் விடைபெற்று கொண்டு திரும்புகையில், நினைவுப்பரிசாக ரங்கநாதர் சிலையை பெற்றுக் கொண்டு விபீஷணன் தெற்கே வந்தான்.

எழில் வனப்புடன் மிகுந்த சோலை நடுவே அகண்ட காவிரியில் சற்று ஓய்வெடுக்க எண்ணிணான். அப்போது, அங்கு சிறுவன் உருவில் நின்று கொண்டிருந்த விநாயகரிடம் ரங்கநாதர் சிலையை சிறிது நேரம் வைத்திருக்குமாறு கொடுத்து விட்டு சென்றான். விநாயகர் சிறிது நேரம் பார்த்து விட்டு அச்சிலையை பூமியில் வைத்து விட்டு அருகில் இருந்த மலையில் போய் அமர்ந்து கொண்டார்.

திரும்பி வந்து வீபிஷணன் சிறுவனைக் காணாமல் மலைத்து போனான். செய்வதறியாது பூமியில் இருந்த சிலையை எடுக்கப்பார்த்தும் அவனால் சிலையை நகர்த்த முடியவில்லை. இதனால் இலங்கைக்கு செல்ல இருந்த ரங்கநாதர், விநாயகரின் அருளால் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளினார்.

தான் சிலையை கொடுத்த அந்த சிறுவன் மலையில் அமர்ந்திருப்பதை பார்த்த வீபிஷணன் கோபமடைந்து, விநாயகர் தலையில் ஒரு குட்டு வைத்தான்என்பது வரலாறு.

உச்சிப்பிள்ளையார் தலையில் இன்றும் அந்த குட்டின் வடு காட்சியளிக்கிறது. இப்படி சிறப்பு வாய்ந்த விநாயகர் தான் தமிழகத்தின் நலன் காக்க அருகில் அமைந்துள்ள ரங்கநாதருடன் ஆண்டாண்டு காலமாய் ஆட்சி செய்து வருகிறார்.

திருச்சி என்றாலே மலைக்கோட்டை அதன் அருகில் அகண்டகாவிரி, அடுத்து ஸ்ரீரங்கம். இப்புனித தலத்தை உலகம் முழுவதும் இருந்து வரும் மக்கள் அனைவரும் தினமும் கண்டு களித்து வருகின்றனர் என்பது அனைவரும் கண்ணால் காணக்கூடிய உண்மை. அப்பர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், தாயுமான அடிகள் ஆகியோரால் பாடல் பெற்ற இக்கோவிலின் கட்டுமானப்பணி மிகவும் வியப்பிற்குரியது.

இக்கோவிலில் குடைந்தெடுக்கப்பட்ட இரண்டு குகைகள் உள்ளன. மேல் குகையில் கிரந்தத்திலும், தமிழிலும் கல்வெட்டு செய்திகள் உள்ளன. கீழ் குகையில் 104 செய்யுள்கள் அந்தாதியாக உள்ளன.

மலைக்கோட்டையின் மீது இருந்து பார்க்கையில், திருச்சி மாநகரின் எல்லா பக்கமும் ரம்மியமாக தெரியும். மலைக் கோட்டையின் உயரம் 275 அடி. மலைக்கோவிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன. இப்படி வடிவமைக்கப்பட்ட கோவிலின் ஆயிரங்கால் புனித மண்டபம் சிறப்பு வாய்ந்தது. இங்கு இன்றும் திருமண வைபவங்கள் நடந்து வருவது மிகச்சிறப்பு.

திருச்சி மலைக்கோட்டை கடந்த 6-ம் நூற்றாண்டில் வாழ்ந்த குணபரன் என்ற மகேந்திரவர்ம பல்லவர் ஆட்சியில் கட்டப்பட்டதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது. இக்கோவிலின் கீழ் உள்ள தாயுமானவர் கோவில் தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று.

விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து அருகம்புல் மாலை சாற்றி வழிபடுகிறார்கள்.