தஞ்சாவூர்: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் நன்றாக இருப்பதாக தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமமுக பொதுச்செயலாளராக இருப்பவர் டி.டி.வி. தினகரன். இவர் கட்சி நிர்வாகிகளின் இல்ல விழாக்களில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களாக தஞ்சாவூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் முதலே  அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்த, அவர் நேற்று இரவு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டிருந்த டிடிவி தினகரன், சிறிய உடல்நலக்குறைவு காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். மருத்து பரிசோதனைகளுக்கு பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டு இருந்தார்.

மருத்துவமனையில் டிடிவியை  பரிசோதித்த மருத்துவர்கள், உணவு உட்கொண்டதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மருத்துவர்கள், அவர் உடல்நலனுடன் இருப்பதாகவும், விரைவில் அவர் வீடு திரும்பி விடுவார் என தெரிவித்தனர். உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் உடல்நிலை சீராக உள்ளது என தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.