சென்னை: திமுக முப்பெரும் விழாவில் விருதுகள் பெறும் விருதாளர்களின் பெயர்களை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

திமுக தொடங்கப்பட்ட நாள், பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள் ஆகியவற்றை ஒவ்வொரு ஆண்டும் திமுக முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகிறது. இதையொட்டி,  தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர் க.அன்பழகன், கலைஞர் கருணாநிதி பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் விவரத்தை திமுக தலைமை வெளியிட்டது. அதன்படி, பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதனுக்கும், அண்ணா விருது கோவை இரா.மோகனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.  கலைஞர் விருது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கும், பாவேந்தர் விருது புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசுக்கும், பேராசிரியர் விருது குன்னூர் சீனிவாசனுக்கும் வழங்கப்படவுள்ளது.

ஒவ்வொரு வருடமும் திமுக முப்பெரும் விழா ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெறுவது வழக்கம். ஆனால், கொரோனா பரவல் காரணமாக சில ஆண்டுகளாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான திமுகவின் முப்பெரும் விழா வரும் 15ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறுகிறது.