சென்னை:

கொரோனா பாதிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு ஓரளவுக்கு உதவியாக இருந்த நகைக்கடனை நிறுத்தி வைத்திருப்பது மனசாட்சியற்ற செயல் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் தன் ட்விட்டர் பக்கத்தில், “கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்களை நிறுத்தி வைத்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. கொரோனா பாதிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாட வாழ்வை நகர்த்துவதற்கு ஓரளவுக்கு உதவியாக இருந்த நகைக்கடனையும் நிறுத்தி வைப்பது மனசாட்சியற்ற செயலாகும். எனவே, இப்படியோர் உத்தரவு பிறப்பித்திருந்தால், தமிழக அரசு அதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.